20 April 2014

மாற்றம் நம் கையில் - 2014 ELECTION ...


மிழகம் மற்றும் புதுச்சேரியில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பிற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் யாருக்கு ஒட்டு என்கிற குழப்பம் குறிப்பாக முதன்முறை ஒட்டு போடப்போகிற இளைஞர்களுக்கு மட்டுமின்றி பரவலாக நிறைய பேருக்கு  இருக்கும் என்றே நினைக்கிறேன் . ஊடகங்களில் வெளிவரும் கருத்துக் கணிப்புகளும் தமிழக வாக்காளர்களிடையே உள்ள குழப்பத்தை ஊர்ஜிதம் செய்வது போலவே இருக்கின்றன ...

நகரம் மட்டுமல்லாமல் கிராமங்களில் கூட அடுத்த பிரதமராக யார்  வர வேண்டும் என்கிற கேள்விக்கு நரேந்திர மோடி என்கிற பதிலையே பரவலாக காண முடிகிறது .  அதே சமயம் யாருக்கு ஒட்டு போடுவீர்கள் என்கிற கேள்விக்கு அ .தி.மு.க வே முன்னணி வகிக்கிறது . பொதுவாக தமிழக மக்கள்  மாநில கட்சிகளுக்கே வாக்களிக்க முன்னுரிமை தருவார்கள் என்பது வரலாறாக இருந்தாலும் கிட்டத்தட்ட எல்லா கருத்துக் கணிப்புகளிலும் பிரதமர் பதவிக்கு மோடியை யே மக்கள் முன்னிறுத்துவது அவர்களின் எண்ண  ஓட்டத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது . அதே சமயம் அந்த தெளிவு ஒட்டு போடும் விஷயத்தில் சிலருக்கு இல்லை என்பதும் புலனாகிறது ...

ஒரு நாள் தெரிந்த நண்பருடன் பேசும் போது காங்கிரஸ் , தி.மு.க இரண்டையும் கடுமையாக சாடினார் . மத்தியில் மோடி தான் பிரதமராக  வேண்டும் என்று உறுதியாக சொன்னார் . ஆனால் அ.தி.மு.க வுக்கே எனது ஒட்டு என்றும்  குழப்பினார் . பா.ஜ .க வுக்கு ஒட்டு போட்டு அது வீணாகி தி.மு.க வந்து விடுமோ என்கிற பயமே  அ.தி.மு.க  பக்கம் சாய காரணம் என்று விளக்கமும் தந்தார் . நான் இதே போல அ.தி.மு.க வுக்கான ஒட்டு வீணாகி அதன் மூலம் தி.மு.க வந்து விட்டால் அப்போது என்ன செய்வீர்கள் என்று கேள்வி கேட்ட பிறகு அவரிடம் கொஞ்சம் தெளிவு பிறந்தது . இந்த உரையாடல் ஒரு சோறு பதம் . நிச்சயம் அவர் அ.தி.மு.க வின் அனுதாபியாக இருந்து அதற்கு தான் எனது ஒட்டு என்று சொல்லியிருந்தால் குழப்பமே இல்லை . ஆனால் மோடி பிரதமராக வருவதற்கு அ.தி.மு.க வுக்கு ஒட்டு என்பது நான் ஏற்கனவே முகநூலில் சொன்னது போல தலையை சுற்றி மூக்கை தொடுவது போன்றது ...

பா.ஜ.க போட்டியிடாத தொகுதிகளில் அ.தி.மு.க வுக்கு வாக்களியுங்கள் என்று சோ தனது துக்ளக் தலையங்கத்தில் எழுதியதும் கொஞ்சம் குழப்பத்தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தும் உக்தி . அதே போல பா.ஜ.க - அ.தி.மு.க இரண்டிற்கும் ரகசிய உடன்பாடு இருப்பது போல ஒரு வதந்தி தி.மு.க , காங்கிரஸ் போன்றவற்றால் பரப்பப்பட்டு வருவதும் , தேர்தலுக்கு பின் நிச்சயம் அ.தி.மு.க - பா.ஜ.க சேர்ந்து விடும் என்பது போன்ற தோற்றத்தை மக்களிடையே ஏற்படுத்தியிருக்கும் . ஆனால் இது போன்ற ஹேஷ்யங்களின் அடிப்படையில் நிச்சயம் ஒட்டு  போட முடியாது . ஏற்கனவே 13 மாதங்களில் அ.தி.மு.க வால் வாஜ்பாய்  அரசு கவிழ்ந்ததையும் யாரும்  மறந்திருக்கவும்  முடியாது ...

இப்போது மற்றவர்களின் தூண்டுதலினாலோ என்னவோ முதலில் காவிரி பிரச்சனையை வைத்து முதல்வர் பா.ஜ.க வை சாட பிறகு மோடி அ.தி.மு.க வும் , தி.மு.க வும் தமிழக மக்களின் முன்னேற்றத்துக்கு வழி செய்யாமல் மாறி மாறி பழி வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள் என்று சாடினார் . ஜெ பா.ஜ .க வை திடீரென திட்டுவதற்கு சிறுபான்மையினர் ஒட்டு வங்கியோ , நிர்பந்தமோ மட்டும் காரணம் அல்ல . முதலில் நாற்பதும் நமதே என்கிற நினைப்பில் பா.ஜ க அணியை சாதாரணமாக எடுத்துக் கொண்டவருக்கு  நிறைய தொகுதிகளில் தி.மு.க வை விட பா.ஜ .க வே தனக்கு சவாலாக இருக்கும் என்கிற தகவல்கள்  வர ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட மாற்றமே இது.
என்ன நடந்தாலும் இந்த கட்சிக்கு தான் ஒட்டு போடுவேன் என்று சொல்லும் சொல்லும் தீவிர அனுதாபிகள் கூடுதலோ குறைவோ எல்லா  கட்சிகளுக்கும் உண்டு . ஆனால் அவர்கள் மட்டும் தேர்தல் முடிவுகளை தீர்மானித்து விட முடியாது .  சூழ்நிலைக்கேற்ப  தங்கள் முடிவுகளை எடுக்கும் நடுநிலையாளர்களும் அரசியல்  மாற்றத்துக்கு முக்கிய காரணிகளாக இருக்கிறார்கள்...

ஒரு பக்கம் மோடி பிரதமராக வர அ.தி.மு.க வுக்கு ஒட்டு போடுங்கள் என்று அவர்கள் ரகசிய பிரச்சாரம் செய்வதாக செய்திகள் கசிய , இன்னொரு பக்கம் 15 வருடங்களாக மாறி மாறி  மத்தியில் நடைபெற்ற ஆட்சியில் அங்கம் வகித்து விட்டு 10 வருடங்களாக நடந்த அவலங்களுக்கும் தனக்கும்   சம்பந்தம் இல்லாதது போல பால் விலை  ஏறிப் போச்சு , பவர் கட் ஆகிப் போச்சு என்று பிரச்சாரங்களிலும் , விளம்பரங்களிலும் அ.தி.மு.க  வை மட்டும் குறை கூறி கொஞ்சம் கூட கூச்ச நாச்சமில்லாமல் தி.மு.க வினர் மக்களின் ஞாபக மறதியின் மேல் நம்பிக்கை வைத்து ஒட்டு கேட்க , மற்றொரு பக்கமோ கை கொடுக்க யாருமின்றி  திரும்ப திரும்ப மோடி மதவாதி என்று சொல்லிக்கொண்டே முஸ்லீம் மதத் தலைவர் புஹாரியிடம் ஆதரவை பெற்றுக் கொண்டு மக்களை முன்னேற்றுவதற்கு வகை செய்யாமல் போலி மதவாதத்தை மட்டுமே நம்பி காங்கிரஸ் பிரச்சாரம் செய்யும் இந்த தருணத்தில் மத்தியில் நிலையான , வலுவான அரசாங்கம் அமைவதற்கு மோடியின் தலைமையிலான பா.ஜ.க வை அரியணையில் ஏற்றுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும் ...

இது இப்பொழுதிருக்கும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு எடுக்கப்படும் முடிவேயொழிய நிரந்தரமான முடிவல்ல . ஒரு வேளை நாம் எதிர்பார்த்தது போல தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் செயல்படாத பட்சத்தில் அடுத்த தேர்தலில் அதனை ஜனநாயக ரீதியில் மாற்றுவதற்கான அதிகாரம் நம் கையில் இருக்கிறது . ஏனெனில் எப்பொழுதுமே மாற்றம் நம் கையில் ...

14 April 2014

நான் சிகப்பு மனிதன் - NAAN SIGAPPU MANITHAN - அரிதாரம் ...


பாண்டிய நாடு ஹிட் டான மகிழ்ச்சியில்  அடுத்ததிலும் பழி வாங்கும் கதைக்கு ஓகே சொல்லி தனது ஃபேவரட் இயக்குனர் திருவின் இயக்கத்தில் தயாரித்து நடித்திருக்கிறார் விஷால் . படம் பாண்டியநாடு அளவிற்கு இல்லாவிட்டாலும் போரடிக்காமல் இருக்கிறது ...

ஹீரோ இந்திரனுக்கு உணர்ச்சிவசப்பட்டால் தூங்கி விடுகிற நார்கோலெப்சி  எனும் வியாதி .  தூங்கினாலும் அவரால் மற்றவர்கள் பேசுவதை  உணர முடியும் . இந்த வியாதியால் கண்ணெதிரிலேயே காதலி கற்பழிக்கப்பட்டும் கண்களில் கண்ணீரோடு தூங்கிக் கொண்டிருக்கிறார் விஷால் . பின்னர் முகம் தெரியாத அந்த நான்கு பேரையும் தன் நினைவுகளின் உதவி கொண்டு எப்படி பழி வாங்குகிறார் என்பதே கதை ...


புரட்சி தளபதி என்கிற டைட்டிலை விட்டதிலிருந்து உருப்படியான படங்களில் நடித்து விருகிறார் விஷால் . படம் பார்ப்பவர்களையும் தனது நடிப்பால் கேரக்டருடன் சேர்ந்து பயணப்பட வைக்கிறார் . ஒரே ஒரு சண்டைக்காட்சி  அதிலும் க்ளைமேக்ஸில் மட்டும் வருவது பொருத்தம் . விஷாலுடன் லிப்லாக் , குளியல் காட்சி என்று போல்டான கேரக்டரில் லக்ஷ்மி மேனன் .  பக்கத்து வீட்டுப் பெண் போலிருப்பவரை பென்ஸ் காரில் வரும் பெண்ணாக மாற்றுவதற்கு மேக்கப் மேன் மெனக்கட்டிருப்பது தெரிகிறது . விஷாலுடன் ஷகிலா படத்துக்கு முதல் நாள் முதல் ஷோ போவது , கல்யாணத்திற்கு  முன்னே கர்ப்பமாவது போன்றவற்றால் கற்பழிக்கப்படும் போது இந்த கேரக்டரின் மேல் ஏற்ப்படவேண்டிய பரிதாபம் மிஸ்ஸாகி விடுகிறது ...

சின்ன சின்ன ஒன் லைனரால் கிச்சு கிச்சு மூட்டுகிறார் ஜெகன் . சரண்யா , ஜெயப்ரகாஷ் இருவரும் இயல்பான நடிப்பால் கவர்கிறார்கள் . சுந்தர் ராமு வின் நடிப்பு பசிக்கு படம் நல்ல தீனி . இனியா இடைவேளைக்கு பின் வந்தாலும் அழுத்தமாக மனதில் பதிகிறார் . ஜி.வி யின் இசையில் லவ்லி லேடீஸ் , பெண்ணே பாடல்கள் முணுமுணுக்க வைக்கின்றன . பின்னணி இசை வசனங்களை மீறி வருவதை தவிர்த்திருக்கலாம் ...


விஷாலின் குறைபாட்டை தெளிவாக  புரிய வைத்து அதனையொட்டி பின்னப்பட்ட முதல் பாதி திரைக்கதை சில இடங்களில் நம்மை தூங்க வைத்தாலும் வேகமாகவே போகிறது . கதைப் பின்னணி கஜினி போல இருந்தாலும் காதல் காட்சிகள் முன்னதைப் போல நம்மை கவராமல் போவது குறை . இடைவேளைக்குப் பின் கதை நம்மை வேறொரு தளத்திற்கு கொண்டு சென்றாலும் இனியா - சுந்தர் ராமு சம்பந்தப்பட்ட காட்சிகள் தையிரியமாக படமாக்கப்பட்டதற்கு பாராட்டுக்கள் ...

திரு தனது முந்தைய  படங்களை போலவே இந்த  படத்திலும் ஒரு மெகா கமர்சியல் வெற்றியை நழுவ விட்டிருக்கிறார் . உணர்ச்சிவசப்பட்டால் தூங்கி விடும் ஹீரோ தேவைப்படும் சில  இடங்களில் தூங்காமலிருக்கும் லாஜிக் சொதப்பல் , வழக்கமான பழி வாங்கும் கதை போன்ற குறைகள் இருந்தாலும் நார்கோலெப்சி  என்னும் புது அரிதாரத்தைப் பூசி நாம் சிகப்பு மனிதனை கவனிக்க வைத்திருக்கிறார்கள் ...

ஸ்கோர் கார்ட் : 41


10 April 2014

ஒரு கன்னியும் மூணு களவானிகளும் - OKMK - கன்னித் திருட்டு ...




மௌன குரு வெற்றிக்குப் பிறகு அவசரப்படாமல் கதை தேர்வில் கவனம் செலுத்தி வரும் அருள்நிதி ஃபேண்டசி டைப் இயக்குனர் சிம்புதேவனுடன் கை கோர்த்திருக்கும் படம் ஒ.க.மூ.க . முந்தைய படம் பெரிய அளவில் போகாததால் வெற்றிக்கு ஏங்கிக் கொண்டிருக்கும் அருள்நிதி க்கு இப்படம் கை கொடுத்ததா ? பார்க்கலாம் ...

காதலியின் திருமணத்தை முறியடித்து அவளை சர்ச்சிலிருந்து தன் சகாக்கள் உதவியுடன் கடத்த திட்டமிடுகிறார் தமிழ் ( அருள்நிதி ) . இந்த சிம்பிளான கதையின் முடிவு ஒரு நிமிட  தாமதத்தால் எப்படி மாறுகிறது என்பதை மூன்று கதாபாத்திரங்களை வைத்துக்கொண்டு மூன்று  விதமான பின்னணியில் 12பி பட பாணியில் சொல்வதே படம் ...

ஆறடி உயரம் என்றவுடன் ஆக்ஷன் அவதாரமெல்லாம் எடுக்காமல் வித்தியாசமான காமெடி படத்தை தேர்ந்தெடுத்தமைக்கு அருள்நிதி க்கு பாராட்டுக்கள் . பெரிதாய் ரியாக்ஷன் எதுவும் கொடுக்காமல் அண்டர்ப்ளே செய்தாலும் சின்ன சின்ன வசன உச்சரிப்புகளில் ரசிக்க வைக்கிறார் . " எதுக்கு சார் என்ன போய்  கடத்த சொன்னீங்க , போக வர கன்வேயன்ஸ் கொடுத்தா நானே வந்துடப் போறேன் " என்று நாசரிடம் அப்பாவியாய் சொல்லுமிடம் நைஸ் ...


பிந்துமாதவி படம் நெடுக பனியனை போட்டுக்கொண்டு நடித் ... சாரி ஓடியிருக்கிறார் . பெரிய கண்களை உருட்டிக் கொண்டு அவர் ஓடும் போது நமக்கு தான் கொஞ்சம் பி.பி ஏறுகிறது  . " இவரும் பார்ட்னரா " என்று படம் நெடுக பதட்டப்படும் பகவதிபெருமாள் தான் படத்திற்கு பெரிய ப்ளஸ் . அருள்தாஸ் , நரேன் உட்பட  படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும் கிடைத்த கேப்பில் ஸ்கோர் செய்கிறார்கள் . நாசர் , எம்.எஸ்.பாஸ்கர் இருவரையும் இன்னும் நன்றாக பயன்படுத்தியிருக்கலாம் ...

பிரம்மா , நாரதர் என்று நாடக பாணியில்  கதை ஆரம்பித்தாலும் அருள்நிதி கடத்தல் ப்ளானை சொல்ல ஆரம்பிக்கும் போதே டேக் ஆஃப் ஆகி முதல் எபிசோட் வரை படு ஸ்பீடாக போகிறது . அதன் பிறகு அடுத்தடுத்த எபிசோட்கள் என்ன தான் சுவாரசியமாக இருந்தாலும் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப சொல்வதால் வரும் சலிப்பை தவிர்க்க முடியவில்லை . அதே சமயம் ஒரே ஆர்டிஸ்டுகளை வைத்துக்கொண்டு வேறு வேறு விதமாக கதை சொல்வது அவ்வளவு எளிதல்ல . ஆனால் வசனங்களிலும் , காட்சியமைப்புகளிலும் நல்ல வேறுபாடுகள் காட்டி திரைக்கதையை திறம்பட செதுக்கியிருக்கிறார் சிம்புதேவன் . குறிப்பாக நடுநடுவே வரும் அருள்நிதி - ஹர்ஷிதா ரெட்டி காதல் காட்சிகள் ரசிக்க வைக்கும் ஹைக்கூஸ் ...



தர்பூசிணி கடை வைத்திருக்கும் பெண் , கேக்குடன் ஊர்ந்து செல்லும் எறும்புகள் , ஃபோன் பேசும் பெண் என்று சின்ன சின்ன விஷயங்களிலும் கண்டினுட்டி மிஸ் ஆகாமல் உழைத்திருப்பவர்கள்  பெரிய பில்டப்புடன் ஒலிம்பிக்கில் ஓடுவது போல ஃபிளாட்டில் இருந்தே ஓட ஆரம்பிப்பவர்களை அதன் பிறகு வழி மறிப்பவர்களுடன் எல்லாம் சாகவாசமாக பேச வைப்பது பேத்தல் ...

முக்கியமாக மூன்றாவது எபிசோட  வரும் போதே நாம் பொறுமையை  இழக்க தொடங்கி விடுகிறோம் . இயக்குனருக்கும் இந்த எண்ணம் தோன்றியதலோ என்னவோ வி.எஸ்.ராகவனை " இவுங்கள நாம சேத்து வக்கலேனா அடுத்த கதைய ஆரம்பிச்சுருவாங்க " என்று சொல்ல வைத்து சமாளித்திருக்கிறார் . இன்னும் கொஞ்சம் மெனக்கட்டிருந்தால் ந.கொ ப.கா அளவிற்கு  ஹிட் ஆகியிருக்க வேண்டிய வாய்ப்பை நழுவ விட்டிருக்கிறார்கள் . படு ஸ்லோவான ப்ரொமோ , " ரன் லோ ரன் " படத்தை தழுவிய  கதை போன்ற சில குறைகள் இருந்தாலும் இரண்டரை மணி நேரம் நல்ல விதத்தில் நம் பொழுதைக் கடத்திய மூணு களவானிகளின் கன்னித் திருட்டை ரசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 42 

30 March 2014

நெடுஞ்சாலை - NEDUNCHAALAI - நெடும்பயணம் ...


முதல் படத்தில் சில்லுனு  ஒரு காதலை  கொடுத்து விட்டு நீண்ட இடைவெளிக்குப் பின் கரடுமுரடான காதலுடன் நெடுஞ்சாலை யில் பயணப்பட்டிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணா . மேக்கிங்கில் முதல் படத்திலிருந்து நிறைய வித்தியாசம் காட்டியிருப்பது தெரிகிறது ...

80 களின் மத்தியில் தேனியில் , ஓடும் லாரிகளிலிருந்து  பொருட்களை லாவகமாக கொள்ளையடிக்கும் தார்ப்பாய் முருகன் ( ஆரி ) , அவன்  காதலி மங்கா ( சிவதா), அவர்கள் காதலுக்கு இடையூறு செய்யும் இன்ஸ்பெக்டர் மாசானி  முத்து ( பிரஷாந்த் நாராயன் ) இவர்களின் கதையை முருகனின் கூட்டாளி ஃப்ளாஷ்பேக்கில் விவரிப்பதே படம் ...


பருத்திவீரன் கார்த்தியை நினைவு படுத்தினாலும் முரட்டு உடம்பு , தாடி , மீசையுடன் அந்த அராக்கு கேரக்டருக்கு நன்றாகவே பொருந்துகிறார் ஆரி . மங்காவை பழி வாங்குவார்  என்று நினைக்கும் போது அவளுக்கு ஆதரவாக கோர்ட்டில் சாட்சி சொல்லி இன்ஸ்பெக்டர் முகத்தில் கரியை பூசுவது க்ளாஸ் . சாந்தமான முகம் , பாவாடை சட்டையுடன் வந்து சிலிர்க்க வைக்கிறார் சிவதா . " ஒரு பொம்பளை தனியா தொழில் பண்ணா என்ன தேவிடியா வா ? " என்று சொல்லி தையிரியமாக இன்ஸ்பெக்டர் காலை உடைக்கும் போது நிமிர்ந்து நிற்கும் இவர் கேரக்டர் ஆரியை காபாற்றுவதற்காக ரூமிற்குள் நிர்வாணமாக நிற்கும் போது சரிந்து விடுகிறது ...

டேனியல் பாலாஜி சாயலில் இருக்கும் கஞ்சா குடுக்கி இன்ஸ்பெக்டரும் , மாட்டு சேகரும் ( சலீம் ) கொஞ்சம் ஓவர் டோஸாக இருந்தாலும் படம் சோர்வடையாமல் பயணப்பட உதவியிருக்கிறார்கள் . அதிலும் இன்ஸ்பெக்டர் " இதுக்கு முன்னாடி இருந்த இன்ஸ்பெக்டர எப்படியா சரிக்கட்டின " என்று கேட்க மாட்டு சேகர்" நான் எங்க சாரே , என் பொண்டாட்டி தான் சரிக்கட்டினா " என்று சொல்வதும் ,  மனைவியின் ரூமிலிருந்து வரும் வேலைக்காரன் கூலாக " எதுக்கு அவசரமா கூப்புட்டீங்க " என்று சேகரிடம் கோபப்படுவதும் ரசிக்க வைக்கும் இடங்கள் ...


சத்யாவின் இசையில் பாடல்கள் , பின்னணி இசை இரண்டுமே பலம்  . ஆனால் சில பாடல்கள் தேவையில்லாமல் திணிக்கப்பட்டது போலிருப்பது பலவீனம் . படத்தில் வைக்கப்பட்டிருக்கும் நிறைய ஷாட்கள் ஒளிப்பதிவாளர் ராஜவேலின் உழைப்பை காட்டுகின்றன .  கரண்ட் , ஃப்ளாஷ்பேக் என்று மாறி வரும் காட்சிகளில் கிஷோர் கொஞ்சம் கரண்ட் காட்சிகளை கட் செய்திருந்தால் படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் ...

நெடுஞ்சாலைகளில் நடந்த கொள்ளைகளை மையப்படுத்திய கதைக்களம் , கதாபாத்திரங்களை வைத்து கதையை நகர்த்திய நேர்த்தி , வசனங்கள் , ட்விஸ் டுடன் நகரும் திரைக்கதை போன்றவை படத்தை கவனிக்க வைக்கின்றன ... பெரிய இம்பேக்டை கொடுக்காத ஆரி - மங்கா காதல் , தொய்வைடைய வைக்கும் சில ரிப்பீட்டட் சீன்கள் , ட்விஸ்ட் இருந்தாலும் எதிர்பார்த்தபடி அமையும் க்ளைமேக்ஸ் , நடந்ததை கூட்டாளி சொல்லி முடித்து விட்டு லாரியில் இருந்து இறங்கி நடக்கும் போதே படத்தை முடிக்காமல் கொஞ்சம் இழுத்தது போன்றவை சார்ட் அன்ட் கிரிஸ்ப்பாக இருந்திருக்க வேண்டிய நெடுஞ்சாலை பயணத்தை நெடும்பயணமாக மாற்றுகின்றன ...

ஸ்கோர் கார்ட் : 41


23 March 2014

குக்கூ - CUCKOO - கலர்ஃபுல் ஹைக்கூ ...


த்திரிக்கையாளர் ராஜுமுருகன் இயக்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் வந்திருக்கும் படம் குக்கூ . இந்த இருவரின் கூட்டணி லோ பட்ஜெட் ரியலிஸ்டிக் மூவிக்கு நல்ல ஒப்பனிங் கிடைக்க காரணமாக அமைந்திருக்கிறது ...

மோதலுக்குப்  பின் காதலிக்கும் இருவர் , காதலியின் அண்ணன் எதிர்ப்பால் பிரிகிறார்கள் . கடைசியில் சேர்ந்தார்களா என்பதே கதை . இந்த சாதாரண காதல் கதையை அசாதாரணமாக மாற்றுவது சம்பந்தப்பட்ட இருவரும் மாற்றுத்திறனாளிகள் என்பதும் , அதை உணர்வுப்பூர்வமாக படமாக்கிய இயக்குனரின் திறமையும் ...

அட்டக்கத்தி தினேஷ் கண் பார்வை இழந்தவராக  அட்டகாசமாக நடித்... சாரி வாழ்ந்திருக்கிறார் . காதலியை பிரிந்த பின்  அவளை தேடி அலையும் போது நம்மையும் சேர்த்து பரிதவிக்க வைக்கும்  அந்த நடிப்பு ஆஸம் . கண் விழிகளை உருட்டிக் கொண்டும்  , விரல்களை பின்னிக் கொண்டும்  தன் உடல் மொழியால் நம்மை கட்டிப்போடும்  மாளவிகா  தமிழுக்கு நல்ல வரவு . காதல் தோல்வியில் துவழும் போதும் , காதலனுடன் சண்டை போடும் போதும் இந்த சுதந்திரக்கொடி நடிப்பால் உயரே பறக்கிறார் . தமிழ் - சுதந்திரக்கொடி இருவருமே நீண்ட காலம் பேசப்படுவார்கள் ...


தினேஷின் நண்பனாக வரும் இளங்கோ , எம்.ஜி.ஆர், சந்திரபாபு, விஜய், அஜித் கெட்  அப்புகளில் வலம் வரும்  நட்சத்திரங்கள் , கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் கதையோடு  ஒன்றி வரும் முருகதாஸ் இவர்கள் எல்லோருமே  படத்திற்கு  பலம் சேர்க்கிறார்கள் . இவர்களோடு சேர்ந்து பார்வையற்றவர்களை இணைக்கும் பாலமாக இசைஞானியின் பாடல்களும் நடித்திருக்கிறது ...

மூர் மார்க்கெட் , ரயில்வே ஸ்டேஷன் என்று பி.கே.வர்மா வின் கேமரா புகுந்து விளையாடியிருக்கிறது . படத்தின் தன்மைக்கேற்ப அமைக்கப்பட்டிருக்கும் லைட்டிங் அருமை . சந்தோஷ் நாராயண் குறிப்பிடத்தக்க இசையமைப்பாளராக வளர்ந்து கொண்டிருக்கிறார் . இந்த படத்திலும் பாடல்கள் , குறிப்பாக  பின்னணி இசை பிரமாதம் . எடிட்டிங் சொதப்பலை சில இடங்களில் காண முடிகிறது ...

தொடுதலின் மூலம் தங்கள் அன்பை வெளிப்படுத்துவது  , ஒரு இடத்திலும் தங்கள் குறைகளை பற்றி புலம்பாமல் தன்னம்பிக்கையோடு வாழ்வது , கேலி, நையாண்டி என்று இருட்டு வாழ்க்கையில் உள்ள வெளிச்சத்தை காட்டுவது இப்படி பார்வையிழந்தவர்களின் உலகத்திற்குள் நம்மை கொண்டு சென்று வாழ வைத்திருக்கிறார் இயக்குனர் ...


குடும்பத்துக்காக  உழைக்கிறேன் என்று சொல்லி கர்ப்பமான மனைவியின் வயிற்றை தடவும் அண்ணன் , பணம் கேட்டவுடன் தன் கழுத்தில் இருக்கும் செயினை அவுத்துத்தரும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரம் , உதவி செய்வது போல செய்து ஒரு லட்சத்தை அபேஸ் செய்யும் போலீஸ்காரர் , பழைய துணிகளை தானம் செய்வதை ஃபேஸ் புக்கில் அப்டேட் செய்யத் துடிக்கும் பெண் , எல்லோருக்கும் மார்க் போடும் பிச்சைக்கார தாத்தா , இடியே விழுந்தாலும் அசராத அய்யர் இப்படி சின்ன சின்ன கதாபாத்திரங்களையும் கவனிக்க வைக்கிறது திரைக்கதை ...

சாதாரண கதை , படத்தின் நீளம் , ஸ்லோவான காட்சிகள் போன்ற சில குறைகள் இருந்தாலும் விளிம்பு  நிலை மனிதர்களின் கதை என்றவுடன் சோகத்தை பிழிந்து நம்மை வாட்டி எடுக்காமல் இயல்பான ஆனால் அதே நேரம் உணர்வுப் பூர்வமான படத்தை கொடுத்ததன் மூலம் வட்டியும் முதலுமாக நம்  மனதை அள்ளுகிறார் ராஜுமுருகன் . மாற்றுத்திறனாளிகளை மையப்படுத்தி இதுவரை வந்த படங்களில் நிச்சயம் தனித்து நிற்கும் இந்த கலர்ஃபுல் ஹைக்கூ ...

ஸ்கோர் கார்ட் : 48 

21 March 2014

பா.ஜ.க கூட்டணி -BJP- வெற்றிக்கான முதல்படி ...

 

2014 தேர்தல் - தடுமாறுகிறதா தமிழகம் ? ! ... என்று கிட்டத்தட்ட ஆறு மாதங்களுக்கு முன்பு  நான் எழுதிய பதிவில் தமிழகத்தில் பா.ஜ.க தலைமையில் தே.மு.தி.க , ம.தி.மு.க மற்றும் பா.ம.க ஆகிய கட்சிகள் இணைந்து கூட்டணி அமைப்பதற்கான சூழலையும் , அவசியத்தையும் உணர்த்தியிருந்தேன் . ஒரு வழியாக  ஏகப்பட்ட இழுபறிக்குப் பின் பாரம்பரிய திராவிட கட்சிகளுக்கு மாற்றாக தேசிய கட்சியின்

தலைமையில் அப்படியொரு கூட்டணி தமிழகத்தில் 50 வருடங்களுக்கு பிறகு அமைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதோடு  மட்டுமல்லாமல் நல்ல மாற்றத்திற்கு வடிகாலாகவும்  இருக்கும் என்றும் நம்புகிறேன் ... 

 

இப்படியொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணிக்கு வித்திட்டவர் எழுத்தாளர் தமிழருவி மணியன் என்பது குறிப்பிடத்தக்கது . எந்தவொரு குறைந்த பட்ச செயல்திட்டமும் இல்லாமல் வெறும் பதவி ஆசைக்காக ஐந்தாறு கட்சிகள் சேர்த்து அமைத்திருக்கும் கூட்டணி தானே என்று சிலர் சாடினாலும் அரசியல் ரீதியாக இந்த கூட்டணியை அவ்வளவு எளிதில் ஒதுக்கி விட முடியாது . இதுவரை அமைந்த அல்லது அமையப்போகிற எந்த கூட்டணிக் கட்சிகளுக்குள்ளும் கொள்கை ரீதியான முரண்பாடுகள் இருக்கத்தான் செய்யும் . அதில் அதிகம் ஆராய்ந்தால் எந்தவொரு கூட்டணியும் அமைந்திருக்காது அல்லது அமையாது என்பதே நிதர்சனம்  ... 

 

அ.தி.மு.க விடம்  2 சீட்களுக்காக  கையேந்தி நின்ற கம்யூனிஸ்டுகளுக்கும் , கடைசி வரை அவர்களை என்னத்த கண்ணையா போல குழம்ப வைத்து கழட்டி விட்ட அ.தி.மு.க விற்கும் , பா.ஜ.க விற்கு கல்லெறிந்து பார்த்து விட்டு எதுவும் நடக்காது என்றவுடன் மதசார்பற்ற அணிகளுடனே எங்கள் கூட்டணி  என்று சொல்லி விட்டு முஸ்லீம் லீக் , மனிதநேய மக்கள் கட்சி போன்றவற்றுடன் கூட்டு சேர்ந்திருக்கும் தி.மு.க விற்கும் இந்த கூட்டணி பற்றி விமர்சனம் செய்ய எந்தவித தார்மீக உரிமையும் இல்லையென்பதே அரசியல் ஆர்வலர்களின் கருத்து ... 

 

அ.தி.மு.க வால் தாங்கள் கழுத்தறுக்கப்பட்ட கோபத்தை அங்கே காட்டாமல் பா.ஜ.க வை தோற்கடிப்பதே எங்கள் இலக்கு என்று அறைகூவல் விடுக்கும் கம்யூனிஸ்டுகளைப் பார்க்கும் போது காமெடி கலந்த வேதனையாய் இருக்கிறது . 2009 இல் காங்கிரசை வரவிடாமல் தடுத்ததில் இவர்கள் செய்த முயற்சி பலித்ததைப் போல இம்முறையும் நடக்கக்கடவது... 

 

முதலில் மோடி அலையே இல்லை என்று சொன்ன காங்கிரஸ்காரர்கள் பிறகு பா.ஜ.க அணியின் தொகுதிப் பங்கீட்டில் உள்ள சிக்கலை காட்டி  கேலி செய்கிறார்கள். பா.ஜ.க அணியிலாவது தொகுதிகளை பங்கிட்டுக் கொள்வதில் தான் பிரச்சனை . அதாவது ஒரு தொகுதிக்கு நிறைய பேர் போட்டி போடுகிறார்கள் . ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு சுளையாக 39 தொகுதிகள் இருந்தும் நிற்பதற்கு யாரும் முன் வரவில்லை என்கிற பரிதாப நிலையிலும்

பா.ஜ.க வை எந்த முகத்தை வைத்துக் கொண்டு குற்றம் சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம் ...

 

இப்படி முதலில் பா.ஜ.க தலைமையில் கூட்டணி என்றவுடன் நிறைய பேர் ஏளனம் செய்தார்கள் , பின் இது முரண்பட்ட கூட்டணி என்று எதிர்த்தார்கள் , கடைசியில் கூட்டணி அமைந்து வெற்றியும் பெற்றவுடன் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவோமாக . இந்த கூட்டணி அனைத்து  தொகுதிகளிலும் வெற்றி பெறுமென்று யாரும் சொல்லவில்லை . அதே நேரம் சுத்தமாக தோல்வியை தழுவவும் வாய்ப்பில்லை . கூட்டணி கட்சியிலுள்ளவர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து  ஒற்றுமையாக பணியாற்றினால் குறைந்தது 8 - 12  தொகுதிகளில் வெற்றி பெறவும் , நிறைய தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடிக்கவும்  வாய்ப்புள்ளது.

உண்மையில் வெற்றி , தோல்விகளை தாண்டி தி.மு.க , அ.தி.மு.க இரண்டையும் தவிர்த்து தமிழகத்தில் இப்படியொரு கூட்டணி அமைந்ததே வெற்றிக்கான முதல்படி ...


9 March 2014

நிமிர்ந்து நில் - NIMIRNTHU NIL - நடுக்கம் ...


ட்பை முன்னிறுத்தி படங்கள் எடுத்தாலும்  அதில் சமூக அக்கறையையும் சேர்த்தே கொடுப்பவர் சமுத்திரக்கனி . அவர் சமூக அக்கறையை மையப்படுத்தி ஷங்கர் பாணியில் லஞ்ச ஊழலை எதிர்த்து இயக்கியிருக்கும் படம் நிமிர்ந்து நில் . படம் நிமிர்ந்து நின்றதா ? பார்க்கலாம் ...

17 வருடங்கள் குருகுலத்திலேயே  படிப்பை  முடித்து விட்டு ரொம்ப நல்லவனாக  வெளி வரும் அரவிந்த் ( ஜெயம் ரவி ) சமூக அவலங்களுக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஊழல் அதிகாரிகளிடம் சிக்கி சின்னா பின்னமாகி பின் அவர்களுக்கு எதிராக நிமிர்ந்து நிற்கிறார் . அதில் வெற்றி பெற்றாரா என்பதே படம் ...

ஜெயம் ரவி க்கு சொல்லிக்கொள்ளும் படியான வேடம் . அரவிந்த் , ரெட்டி என இரண்டு கேரக்டர்களிலுமே வித்தியாசம் காட்டி நன்றாக நடித்திருக்கிறார் . இரண்டு ரவி களும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சிகள் ஜெயம் . என்ன தான் குருகுலத்திலேயே படித்திருந்தாலும் ப்ராக்டிகளாக இல்லாததும் , கேரக்டர் அந்நியன்  அம்பி யை நினைவுபடுத்துவதும் நெருடல் . கோர்ட்டில் பேசும் வசனங்கள் சூப்பர் ...


அமலா பால் பாடல் காட்சிகள் தவிர அடக்கி வாசித்திருக்கிறார் . சூரி க்கு படத்தில் குணச்சித்திர வேடம் என்றாலும் சிரிக்கவும் வைக்கிறார் . வழக்கமான சமுத்திரக்கனி யின் நட்சத்திர பட்டாளங்கள் படத்தில் இருந்தாலும் கு.ஞானசம்பந்தன் மற்றும் படவா கோபி ரசிக்க வைக்கிறார்கள்.
சரத்குமார் இன்டர்வெல் ப்ளாக்கிற்கு மட்டும் உதவியிருக்கிறார் . கோபிநாத் கேரக்டரை சரியானபடி பயன்படுத்தியிருக்கிறார்கள் ...

ஜி.வி யின் இசையில் இரண்டு மெலடிகளும் , கானா பாலாவின் பாடலும் முணுமுணுக்க வைக்கின்றன . சண்டைக்காட்சிகளை நன்றாக எடுத்திருக்கிறார்கள் . எடிட்டிங் நேர்த்தியாக இருக்கிறது ...


ஜெயம் ரவிக்கு ஏற்படும் சின்ன சின்ன பிரச்சனைகளை பின்னி எடுக்கப்பட்டிருக்கும்  முதல் பாதி , சமுத்திரக்கனி யின் சமூக அக்கறை பளிச்சிடும் சாரப் வசனங்கள் , அடுத்து என்ன என்ற எதிர்பார்ப்பை கொடுக்கும் திரைக்கதை இவையெல்லாம் படத்தில் நிமிர்ந்து நிற்கின்றன ...

முதல் பாதியில் கொடுத்த டெம்போ வை தக்க வைக்க தவறியது , அந்நியன் , ரமணா , சிட்டிசன் என்று பார்த்து பழகிய கதை என்பதோடு படத்தில் வரும் சீன்களும் அந்த படங்களை நினைவு படுத்துவது , ஹீரோ வின் பெயர் அரவிந்த் , அவர் ஆரம்பிக்கும் ஏ.சி.ஐ இயக்கம் என்று நடப்பு சமாச்சாரங்களை
தொட்டிருந்தாலும் கோபிநாத் , மீடியா செய்திகள் என்று பார்ப்பது படமா இல்லை சேனலில் வரும் விவாதமா என்கிற அளவிற்கு சலிப்பை தருவது போன்றவை நிமிர்ந்து நின்று வேகமாக ஓடியிருக்க வேண்டிய படத்தை நடுங்க  வைக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 41 




பதிவு போடலையோ பதிவு ! ...


திவெழுதி ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது . உடல் நிலை சரியில்லையா அல்லது சினிமா பார்ப்பதை விட்டு விட்டீர்களா என்றெல்லாம் கேள்விகள்  வர ஆரம்பித்த பிறகு தான் இந்த இடைவெளியின் நீளம் நன்றாக உறைக்கிறது.
எனக்கு அம்மை போட்டதன் காரணமாக இதே போன்றதொரு இடைவெளி சென்ற வருடம் இதே நேரம் ஏற்பட்டது . அப்பொழுது கூட விஸ்வரூபம் பிரச்சனை கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் வீட்டிலிருப்பவர்கள் திட்டையும் பொருட்படுத்தாமல் எழுத  ஆரம்பித்து விட்டேன் ...

மற்றபடி எழுதாமல் இருப்பதற்கு கணினியில்  கோளாறோ அல்லது இணையத்தில் தடையோ தான் பொதுவாக காரணமாக இருக்கும் . ஆனால் இந்த முறை அப்படி எந்தவித தடையும் இல்லாமல் நான் பதிவு போடாதது  மட்டுமல்ல இணையத்திலேயே உலவாமல் போனதற்கு எந்த ஒரு குறிப்பிட்ட காரணமும் இல்லை .  அதே நேரம் திடீரென ஒரு நாள் ஷஹி மூலம்  மூன்றாம் கோணம் இணைய தள நிறுவனரும் , நண்பருமான அபி கார் விபத்தில் இறந்து விட்டார் என்ற செய்தியை கேட்டவுடன் ஏற்பட்ட அதிர்ச்சி வேறெதையும் பற்றி சிந்திக்க விடாமல் சில நாட்கள் என்னை கட்டிப்போட்டதும் உண்மை ...

படங்கள் ரிலீசானவுடன் பார்க்காமல் போனது விமர்சனங்கள் எழுதாததற்கு காரணாமாக இருந்தாலும் அப்படி பார்க்காமல்  போனது ஏனென்று யோசித்தால் அதற்கும் விடையில்லை . ஆனால் ஒரு விஷயம் நமக்கு பிடித்திருந்தாலும் அதையே திரும்ப திரும்ப செய்யும் போது  ஏற்படும் அயர்ச்சி தான் இதற்க்கெல்லாம் அடித்தளமாக இருக்கும் என்று நினைக்கிறேன் .  கணவன் மனைவிக்குள் என்ன தான் பிடித்தம் இருந்தாலும்
ஒரு இடைவெளி ஏற்படும் போது பிறக்கும்  சுதந்திரத்தை எல்லாரோலும் உணர முடியும் . பிரிவிற்கு பிறகு இணையும் போது உறவு இன்னும் வலுப்படும் . ஒரு மாத இடைவெளிக்கு ஓவர் பில்ட் அப் கொடுக்கிறேனோ . சரி விடுங்க மேட்டருக்கு வருவோம் ...

கடைசியாக விமர்சனம் எழுதிய படம் ரம்மி . ஒரு வேளை அது தான் அடுத்து படங்களை ரிலீசானவுடன் பார்க்காதற்கு  காரணமோ என்றெல்லாம் யோசித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை . வீரம் , ஜில்லா என்று கமர்சியல் அதிரடியில் ஆரம்பித்த 2014 பிறகு கொஞ்சம்  தொங்க ஆரம்பித்து விட்டது . விஜய் சேதுபதியின் ரம்மி , பண்ணையாரும் பத்மினியும் இரண்டுமே சரியாக போகவில்லை . பார்ட்டி உஷாராக வேண்டிய நேரமிது . கதையை  தேர்ந்தெடுப்பதில்  கவனம் செலுத்தாவிடில் காணாமல் போய்  விடும் அபாயம் உள்ளது ...

இங்க என்ன சொல்லுது , இது கதிர்வேலன் காதல் இரண்டுமே காமெடி என்ற பெயரில் வந்த மொக்கைகள் தான் என்றாலும் இரண்டாவது கொஞ்சம் பரவாயில்லை . சின்ன பட்ஜெட்டில் வந்த  கோலி சோடா பாராட்டுக்களோடு பைசாவையும் அள்ளியது சந்தோசம் . படம் பிடித்திருந்தாலும் எனக்கென்னமோ ரேணிகுண்டாவில் நடித்தது போன்ற பையன்கள் நடித்திருந்தால் படம் இன்னும்  பிக் அப் ஆகியிருக்கும் . ஏனா பசங்க ரொம்ப பால்வாடி யா இருக்காங்க . வல்லினம் , தெகிடி இரண்டுமே நன்றாக இருப்பதாக சொல்கிறார்கள் . இன்னும் பார்க்கவில்லை . நிமிர்ந்து நில் ரிலீசாகி இருக்கிறது . பார்த்தவுடன் பதிவு போடலாம் என்றிருக்கிறேன் ...

நாடாளுமன்ற தேர்தலுக்கு தேதியையே அறிவித்தாகி விட்டது . அரசியலை தொடாமல் போனால் நன்றாக இருக்குமா ? . நான் எனது முந்தைய பதிவுகளில் சொன்னது போல எதிர்பார்த்த படி பி.ஜே.பி - ம.தி.மு.க - பா.ம.க - தே.மு.தி.க கூட்டணி அமையவிருப்பது இந்த தேர்தலுக்கு மட்டுமல்ல அடுத்த சட்டசபை தேர்தலுக்கும் தி.மு.க , அ.தி.மு.க விற்கு நல்ல மாற்றாக இருக்கும் என நம்பலாம் . கம்யூனிஸ்டுக்களை கழட்டி விட்டதிலிருந்து அ.தி.மு.க அதீத நம்பிக்கையிலிருப்பது தெரிகிறது . தோழர்களுக்கு தோள் கொடுக்க மு.க காத்திருக்கிறார் . அவர்கள் செவி சாய்ப்பார்களா தெரியவில்லை . நான் பல முறை சொன்னது போல காங்கிரஸ் தனித்து விடப்பட்டிருக்கிறது . இப்படி பல்முனை போட்டி நடப்பது குழப்பத்தை கொடுத்தாலும் அந்தந்த கட்சிகளின் பலத்தை நிரூபிப்பதற்கு ஏதுவாக இருக்கும் ...

வேட்பாளர்களை பார்த்து வாக்களிக்கும் வழக்கம்  இருந்தாலும் நடப்பது நாடாளுமன்ற தேர்தல் என்பதையும் , மத்தியில் நிலையான ஆட்சி அமைய வேண்டுமென்பதையும் மறக்காமல்மக்கள்  வாக்களிப்பார்கள் என்று நம்பலாம் . ஏனெனில் டில்லியில் ஆம் ஆத்மி அடித்த 48 நாள் கூத்தை யாராவது மறக்க முடியுமா ? சொன்ன வாக்குறுதிகளை  நிறைவேற்ற முடியாது என்று தெரிந்தவுடன் அரவிந்த் அடித்த அந்தர் பல்டி பழுத்த அரசியல்வாதிகளையும் மிஞ்சி விட்டது . மத்தியிலும் இது போன்றதொரு நிலை ஏற்படாமல் இருக்க மக்கள் தான் உஷாராக இருக்க வேண்டும் ...

2 February 2014

ரம்மி - RUMMY - ராங் டிக் ...


ரிசையாக வெற்றிகளை கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, தனிப்பட்ட முறையில் பரிச்சயமாயிருந்த இனிகோ பிரபாகர் இந்த இருவருமே ரம்மி யின் மேல் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தார்கள் .  இவர்கள் ஏமாற்றவில்லையென்றாலும் இயக்குனர் பாலகிருஷ்ணன் சுவாரசியமில்லாத ரம்மி யை ஆடி நம்மை படுத்தி விட்டார் ...

87 இல் கதை நடக்கிறது . விடுதியில் தங்கி கல்லூரியில் ஒன்றாக படிக்கும் சக்தி ( இனிகோ ) , ஜோசப் ( விஜய் சேதுபதி ) இருவருக்கும் அந்த ஊர் பெண்களிடம் ( காயத்ரி ,ஐஸ்வர்யா ) ஏற்படும் காதலும் , அதனால் வரும் பிரச்சனைகளும் என்கிற அதரபழசான ஒன்லைன் தான் கதை . 80 களின் பின்னணியில் கதை நடக்கிறது என்பதற்காக 80 களிலேயே பார்த்து புளித்துப்போன திரைக்கதையையேவா எடுக்க வேண்டும் ?! ...

அழகர் சாமியின் குதிரை , சுந்தரபாண்டியன் போன்ற படங்களில் முக்கியமான கதா பாத்திரங்களில் வந்த இனிகோ விற்கு இந்த படத்தில் முழு நீள கதாநாயகன் வேடம் . சில க்ளோஸ் அப் காட்சிகளில் நடிப்பில் நெருடினாலும் மொத்தத்தில் தனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் இனிகோ . நிறைய வாய்ப்புகள் கிடைத்து மேலும் வளர வாழ்த்துக்கள் ...


முன்னதாகவே புக் செய்யப்பட்டு விட்டதால் வேறு  எந்த ஒரு நடிகரும் செய்திருக்கக் கூடிய சாதாரண வேடத்தில் விஜய் சேதுபதி . பார்ட்டியை கல்லூரி மாணவன் என்று கற்பூரம் அனைத்து சத்தியம் செய்தாலும் நம்ப முடியவில்லை . வெகுஜன நாயகன்  ( ஓசியா டைட்டில் கொடுத்தாச்சு ) விஜய் சேதுபதிக்கு இந்த படம் எண்ணிக்கைக்கு மட்டுமே உதவும் ...

வடிவேல் பாணியில் வளம் வரும் சூரி கல்லூரியில் செய்யும் சில சேட்டைகளை ரசிக்கலாம் . ஆனால்  அவர் சீரியசாக நட்பை பற்றி இனிகோவிடம் பேசும் போது சிரிப்பு வருகிறது . இனிகோ விற்கு ஜோடியாக சுமார் மூஞ்சி காயத்ரியும் , விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ரொம்ப சுமார் மூஞ்சி ஐஸ்வர்யா வும் ( பேரையாவது மாத்தலாம் ) கிராமத்து பெண்கள் வேடத்தில் பொருத்தமாக நடித்திருக்கிறார்கள் ...


யதார்த்தமான கதாபாத்திரங்கள் , இடைவேளைக்கு பிறகு  கொஞ்சம் சூடு பிடிக்கும் திரைக்கதை , மலரும் நினைவுகளை கொடுக்கும் டூரிங் டாக்கீஸ் காட்சிகள் , லொக்கேஷன் , ஒளிப்பதிவு போன்றவை ரம்மியை கவனிக்க வைக்கின்றன . இமானின் பின்னணி இசை எஸ்.ஏ ராஜ்குமாரை நினைவு படுத்தினாலும் பாடல்கள் படத்திற்கு பலம் மட்டுமல்ல ஆறுதலும் கூட ...

சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்று முடிவெடுக்கும் போதே அவரவர் மனதில் ஒரு ஓன்லைன் உதயமாகும் . ஆனால் பல வருடங்களுக்கு பிறகு இயக்குனராகும் வாய்ப்பு கிடைக்கும் போது காலத்திற்கேற்றார்ப் போல கதை , திரைக்கதை யை செப்பனிடா விட்டால் கையை கடித்து விடும் . அந்த வரிசையில் இயக்குனருக்கு மட்டுமல்ல ரசிகர்களுக்கும் ரம்மி - ராங் டிக் ...

ஸ்கோர் கார்ட் : 38


12 January 2014

வீரம் - VEERAM - வெல்லும் ...


தீனா தவிர்த்து பொங்கலுக்கு ரிலீசான அஜித்தின் அத்தனை படங்களும் அட்டர் ஃப்ளாப் . அதோடு கோட் சூட் , கூலிங் க்ளாஸ் , கையில் துப்பாக்கி என்று அல்டரா  மாடல் போல சுற்றிக் கொண்டிருந்தவரை வேட்டி சட்டை , விபூதி , அரிவாள் என்று கிராமத்து ஆளாக காட்டினால் எடுபடுமா ? இப்படி பல சந்தேகங்களுக்கு இந்த வெற்றியின் மூலம் அஜித்தை வைத்து தல பொங்கல் கொடுத்து பதில் சொல்லியிருக்கிறார்  இயக்குனர் சிறுத்தை சிவா ...

குடும்பம்  பிரிந்து விடுமோ  என்கிற பயத்தில்  4 தம்பிகளுடன் கட்டை பிரமச்சாரியாக வாழ்கிறார் விநாயகம் ( அஜித்குமார் ) . தம்பிகளோ கோப்பெரும்தேவி ( தமன்னா ) யை அண்ணனுக்கு கரெக்ட் செய்ய , காதலியின் அப்பா ( நாசர் ) சம்மதம் வாங்க அவளுடன் ஊருக்கு செல்லும் அஜித்  அந்த குடும்பத்திற்கு ஏற்படவிருக்கும் பெரிய அபாயத்தை அவர்களுக்கே தெரியாமல் தன்  வீரம் காட்டி முறியடிக்கிறார் ...


சால்ட் அண்ட் பெப்பர் லுக் கொஞ்சம் போரடிக்க ஆரம்பித்து விட்டாலும் பேச்சில் அமைதியையும் , சண்டையில் ஆக்ரோஷத்தையும் அழகாக காட்டி  வசீகரிக்கிறார் அஜித் . மாஸ் ஹீரோக்களில் ரஜினிக்கு அடுத்து " Larger than Life"  இமேஜை ஸ்க்ரீனில் படம் முழுவதும் கேரி செய்யும் தகுதி தனக்கிருப்பதை மீண்டுமொருமுறை நிரூபிக்கிறார் . சண்டையில்லாமல் அறிமுகம் ஆகிறாரே என்று சந்தோசப்பட்டால் அதன் பிறகு பல பேரை  அடித்து கொன்றே அதை சிதைத்து விடுகிறார் . ஆனாலும் ரயில் சண்டையில் அவர் எடுத்திருக்கும் ரிஸ்க் அபாரம் . இது வரை ஒப்பனிங் கிங் என்று அறியப்பட்டவர் தொடர் வெற்றிகளின் மூலம் மாஸ் கலெக்சன் கிங்காகவும் மாறியதற்கு வாழ்த்துக்கள் ...

தமன்னா பாடல் காட்சிகளுக்கு மட்டும் வந்து ரசிகர்களை தம்மடிக்க அனுப்பாமல் கொஞ்சம் நடிக்கவும் செய்திருக்கிறார் . நான்கு தம்பிகளுள் விதார்த் தேறுகிறார் . அடிதடி குடும்பத்தை பெயிலில் எடுக்கவே வீட்டோடு இருக்கும் வக்கீல் சந்தானம் கொடுக்கும் காதல் ஐடியாக்கள் கல கல . முதல் பாதி இவர் உபாயத்தில் வேகமாகவே போகிறது . வில்லன்கள் ராவத் , அதுல்  இருவரும் கவனிக்க வைக்கிறார்கள் . தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்களில்  பழைய நெடி இருந்தாலும் அஜித் சண்டை  போடும் போது வீரம் பின்னணி பாடல் முறுக்கேற்றுகிறது ...


புதிதாய் எதுவும் இல்லாத கதை , அஜித் - தமன்னா இருவரின் காதலை வைத்தே இடைவேளை வரை ஒப்பேற்றியது , பாடல்கள் , அளவுக்கதிகமான சண்டைகள் போன்ற குறைகள் இருந்தாலும் சந்தானத்தின் காமெடி , அஜீத் தை
கச்சிதமாக பயன்படுத்தி ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் அனைவருக்கும் பொங்கல் விருந்து கொடுத்த விதத்தில் வீரம் வெல்லும் ...

ஸ்கோர் கார்ட் : 43



ஜில்லா - JILLA - தீவிர விஜய் ரசிகர்கள் வசிக்கலாம் ...




ண்பன் , துப்பாக்கி என்று புது பாணியில் ஹிட் கொடுத்துக் கொண்டிருந்த விஜய் தலைவா வின் தோல்விக்கு பிறகு தன் பழைய பாணிக்கு திரும்பியிருக்கும் படம் ஜில்லா . தனது தீவிர ரசிகர்கள் மட்டுமே கல்லாவை  நிரப்பி விடுவார்கள் என்கிற அதீத நம்பிக்கையில் ஜில்லாவில் நேசனுடன் இணைந்து களம் இறங்கியிருக்கிறார் விஜய் . நினைத்தது பலித்ததா ?. பார்க்கலாம் ...

மதுரையின் பெரிய தாதா சிவன் ( மோகன்லால் ) , அவரது வளர்ப்பு மகன் சக்தி ( விஜய் ) . போலீஸ் என்றாலே பிடிக்காத சக்தியை தன்னுடைய சவுகரியத்துக்காக ஏ.சி ஆக்குகிறார் சிவன் . வளர்த்த கடா மார்பில் பாய்வது போல போலீசானவுடன் சிவனுக்கு எதிராக திரும்புகிறார் சக்தி . ஜெயித்தது சிவனா ? சக்தியா ? என்பதே மூன்று மணி நேர படம் ...



விஜய் தன் வழக்கமான துள்ளல் நடிப்பில் மனதை அள்ளுகிறார் . அவர் குரலில் வரும் கண்டாங்கி பாடலுக்கும் , சிவனும் பாடலில் அவர் நடனத்துக்கும் தியேட்டரே அதிர்கிறது .  என்ன தான் மந்திரி சிபாரிசில் போலீசானாலும் முதல் நாளே ஏதோ  காலேஜுக்கு போவது போல கலர்  ட்ரெஸ்ஸில் வருவது , கமிசனருக்கு சல்யூட் போடாமல் சவடாலாய் பேசுவது எல்லாம் ர்ரொம்பவெ ஓவர்ங்கண்ணா . போக்கிரியாக மனதில் பதியும் விஜய் போலீசாக , சாரி பாஸ் ...

டைட்டிலில் விஜய்க்கு முன்னாள் பெயர் வருவதோடல்லாமல் படம் முழுவதும் " நான் சிவன்டா " என்று விஜய் பேசாத பஞ்ச் டயலாக்ஸ் பேசி ரணகளப்படுத்துகிறார் சேட்டன் மோகன்லால் . மலையாள வாடையில் பேசினாலும் இந்த மதுரை தாதாவை ரசிக்கலாம் . பொதுவாக ராஜ்கிரண் செய்யக்கூடிய சாதாரண தாதா பாத்திரமானாலும் அதற்கு மோகன்லாலை தேர்ந்தெடுத்தது சிறப்பு . ஆனால் தன் மகன் ( மகத் ) செய்த தவறால் ஊரே பற்றியெரிய அதற்காக ஒரு சிறு வருத்தம் கூட காட்டாத இவரது கேரக்டர் பெரிய சறுக்கல் ...

காஜல் அகர்வால் மசாலா படங்களில் வரும் வழக்கமான ஹீரோயினாக வந்து போகிறார் . சூரி சில இடங்களில் சிரிக்க வைத்தாலும் டபுள் மீனிங் வசனங்கள் நெளிய வைக்கின்றன . இவர் அபாய இடத்தில் அடி வாங்கி அடிக்கடி கதறுவதும் எரிச்சல் . சம்பத் போன்ற சிறந்த நடிகர் வில்லனாக வந்து உதை வாங்குவது வருத்தமாக இருந்தாலும் விஜயுடனான இவரது மோதல் படத்திற்கு பலம் . தம்பி ராமையா , அட்டாக் பாண்டி எல்லாம் வீணடிக்கப்பட்டிருக்கிரார்கள் . டி.இமானின் இசையில் பாடல்கள் ஹம்மிங் செய்ய வைத்தாலும் பின்னணி இசை இரைச்சல் ...



கேரளாவில் விஜய்க்கு இருக்கும் மார்க்கெட்டை மனதில் வைத்து இணைக்கப்பட்டிருக்கும் மோகன்லால் , இடைவேளையில் விஜய் எடுக்கும் போலீஸ் அவதாரம் , விஜயின் துள்ளல் , சம்பத் கொடுக்கும் ட்விஸ்ட் இப்படி ஜில்லாவில் சில விஷயங்கள் நல்லாவே இருக்கின்றன ...

அதரப்பழசான கதை தான் என்றாலும் புதிதாய் யோசித்து சீன்கள் பிடிக்காமல் போனதில் கோட்டை விடப்பட்ட திரைக்கதை , படத்தின் நீளம் , மோகன்லால் கேரக்டரின் சறுக்கல் , அதனால் விஜய் - மோகன்லால் பிரிவு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்ப்படுத்தாது , தங்கை சென்டிமெண்டிற்காக புகுத்தப்பட்ட ஆர்.கே எபிசோட் இவையெல்லாம் ஜில்லாவின் கல்லாவை ரொம்பவே பாதிக்கின்றன . கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் கில்லி , போக்கிரி வரிசையில் வந்திருக்க வேண்டிய படம் வில்லு , சுறா அளவிற்கு மோசமாக இல்லாததால் ஜில்லாவில் தீவிர விஜய் ரசிகர்கள் வசிக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


10 January 2014

ஆம் ஆத்மியும் அறிவுஜீவிகளும் ...


மீடியாக்களுக்கு , குறிப்பாக  ஆங்கில சேனல்கள் மற்றும் பத்திரிகைகளுக்கு ஏதாவது ஒரு விஷயம் தீனி போட்டுக் கொண்டேயிருக்க  வேண்டும் . அப்பொழுது தான் அவர்கள் பிழைப்பு ஓடும் . 2ஜி , மோடி விவகாரம் , டெல்லி பெண் கற்பழிப்பு ( அந்த சம்பவத்தை ஒட்டி தமிழ் நாட்டில் ஒரு பள்ளி  சிறுமி கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட போது அதற்கு ஒரு சிறிய சலசலப்பைக்  கூட இவர்கள் காட்டவில்லை ) , ஐ.பி.எல் பெட்டிங் இப்படி பலவற்றை தொடர்ந்து இப்பொழுது அவர்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருப்பது சமீபத்தில் காங்கிரசின் ஆதரவோடு டில்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் ஆம் ஆத்மியும் , அதன் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலும் ...

அர்விந்த் கெஜ்ரிவால் ஐ.ஐ.டி யில் படித்தவர் , அரசு வேலையை  உதறி விட்டு பொதுநலப் பணிக்காக  தன்னை அர்ப்பணித்தவர் , ஊழலை ஒழித்துக் கட்ட வேண்டுமென்கிற நோக்கத்தோடு அரசியலில் குதித்தவர் என பல சிறப்பம்சங்களையும் தாண்டி கட்சி ஆரம்பித்து ஒன்பது மாதங்களிலேயே டில்லியில் ஆட்சியை பிடித்தவர் என்கிற ஒரு காரணத்திற்காகவே இன்று இந்தியாவையே  தன்னை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் . சினிமா , அரசியல் பின்புலம் எதுவும் இல்லாமல் இது போன்ற ஒரு சாதனையை  அவர் செய்திருப்பது வியக்கத்தக்கது . முதல்வன் படத்தில் வருவது போல ஒரு சாமான்யன் நினைத்தாலும் இது போன்ற மாற்றங்களை கொண்டு  கொண்டு  வர முடியும் என்று நிரூபித்த விதத்தில் அவர் இந்திய எதிர்கால அரசியலுக்கு ஒரு நம்பிக்கை ...

இதையெல்லாம் சொல்லும் அதே நேரத்தில் அவரின் வெற்றியை தொடர்ந்து அர்விந்த் கெஜ்ரிவால் அடுத்த பிரதமர் ஆவதற்கு தகுதியானவர் என்றும் , அவரின் கட்சிக்கு இந்தியா முழுவதும் பெருத்த ஆதரவு இருப்பது போலவும் சில மீடியாக்களும் , அதிலுள்ள அறிவு ஜீவிகளும் Knee Jerk ரியாக்சன் கொடுப்பது அவர்களின் அரைவேக்காட்டுத்தனத்தையே காட்டுகிறது . முதலில் ஊழலுக்கு எதிராக கட்சியை ஆரம்பித்தவர் எப்பொழுது காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியமைத்தாரோ அப்பொழுதே அர்விந்த் சந்தர்ப்பவாத அரசியல்வாதியாகி விட்டார் . அடுத்தது காஷ்மீர் பிரச்சனை பற்றிய முழுமையான புரிதல் இல்லாமல் ஏனோதானோ என்று ஒரு கருத்தை பிரஷாந்த் பூஷன் சொல்லி வைக்க அதை தொடர்ந்து சில அமைப்பினர் உ.பி யில் உள்ள ஆம் ஆம்தி அலுவலுகத்தை சூறையாடினர் . அதனை தொடர்ந்து
 " காஷ்மீர் பிரச்சனை தீர எனது உயிர் தான் தேவை என்றால் அதை தரவும் நான் தயார் " என்று அர்விந்த் அதீத உணர்ச்சியோடு பேசியதிலிருந்து சாமான்ய முகத்திரையை அவிழ்த்து சாணக்கிய அரசியல் முகமூடியை போடத்  தொடங்கி விட்டார் ...

நல்ல ஒரு மாற்றத்தை கொண்டு வருவார்  என்ற நம்பிக்கையோடு வாக்களித்த டில்லி வாக்காளர்களுக்கு காங்கிரஸ் உதவியுடன் ஆட்சி அமைத்ததன் மூலம் ஏமாற்றம் அளித்தவர் , முதல்வராக பதவியேற்று ஒரு மாதம் கூட  முடிவடையாத நிலையில் அவசரம் அவசரமாக தேசிய அரசியலுக்கு தாவுவது அவரின் நம்பகத்தன்மையை குலைத்து கிடைத்த சந்தர்ப்பத்தை  பயன்படுத்திக் கொள்ளும் பக்கா அரசியல்வாதியாகவே நம் கண் முன் காட்டுகிறது . ஏனெனில் டில்லி மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதிகளை ஒழுங்காக நிறைவேற்றவே அவருக்கு ஐந்து ஆண்டுகள் போதாது . அப்படியிருக்க தேசிய அரசியலில் அவர்கள் காட்டும் ஆர்வம் காங்கிரசுக்கும் , ஆம் ஆத்மிக்கும் ரகசிய உடன்பாடு இருக்கிறதோ என்கிற சந்தேகத்தை கிளப்புகிறது . அடுத்த  முறை ஆட்சியமைக்கும் வாய்ப்பு கிட்டத்தட்ட அழிந்திருக்கும் நிலையில் காங்கிரசுக்கு ஆம் ஆத்மியின் வளர்ச்சி பெரிய பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை . மாற்றாக மோடிக்கு ஆதரவாக விழும் ஓட்டுக்களை ஓரளவுக்கேனும் சிதைப்பதற்கு நிச்சயம் அர்விந்த் அனுகூலமாக இருப்பார் ...

அர்விந்த் படித்த புத்திசாலி , தனிப்பட்ட முறையிலும் தூய்மையானவர் எனவே அவர் பிரதமர்  ஆவதில் என்ன தவறு இருக்கிறது என்று கேட்கலாம் . நிச்சயம் தவறில்லை தான் . ஆனால் முதலில் முதல்வராக அவர் தனது கடமையை திறம்பட செய்து தன்னை நிரூபிக்கட்டும் என்பதே  பலரது எண்ணம் .  மேலும் அர்விந்த் போலவே அதிகம் படித்தவரும் , தனிப்பட்ட முறையில் தூய்மையானவரும் ஆன மன்மோகன் சிங் இரண்டு முறை பிரதமராக இருந்து நமக்கெல்லாம் என்ன செய்தார் என்பது நாடறிந்த விஷயம். அதற்காக மன்மோகன் போல தான் அரவிந்தும் இருப்பார் என்று சொல்ல வரவில்லை . அதே நேரம் படிப்பும் , தனிப்பட்ட தூய்மையும் மட்டும் திறம்பட ஆட்சி செய்வதற்கு போதுமானதாக இருக்காது என்பதையே வலியுறுத்துகிறேன் ...

கட்சி ஆரம்பித்து ஒன்பது  மாதங்களே ஆகியிருந்தாலும் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கும் மேலாக லோக்பால் சட்ட மசோதாவுக்கு ஆதரவாக அன்னா ஹசாரே , கிரண் பேடி  போன்றோருடன் இணைந்து அர்விந்த் நடத்திய போராட்டங்களே அவரை டில்லி மக்களிடையே பிரபலப்படுத்தியது . அன்னா , கிரண் இருவரும் அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கி விட  அவர்களுக்கு கிடைத்த ஆதரவையும் சேர்த்து மொத்தமாக அர்விந்த் அறுவடை செய்தார் என்பதே நிதர்சனம் . அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியை அன்னா புறக்கணித்ததும் , அவருக்கு எங்கிருந்து இவ்வளவு பணம் வந்தது என்று அவர் கேள்வி எழுப்பியதும் பலவித சந்தேகங்களை கிளப்புகின்றன . மோடி போன்ற  வலிமையான ஒருவர்  இந்தியாவுக்கு பிரதமராவதை அமெரிக்கா விரும்பாததால் அங்கிருந்து அதிக பணம் மறைமுகமாக ஆம் ஆத்மிக்கு வருகிறது என்பது ஒரு சாரரின் கருத்து ...

நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரசை  கலைத்து விட சொன்னார் காந்தி . அதே போல காந்தியவாதியான அன்னா ஹசாரே ஆம் ஆத்மி என்று கட்சியை ஆரம்பிக்க எதிர்ப்பு தெரிவித்தார் . இரண்டிற்கும் ஏதோ ஒற்றுமை இருப்பது போலவே படுகிறது . இவையெல்லாவற்றையும் விட லோக்பால் மசோதாவுக்காக அர்விந்த் , அன்னா வுடன் ஒரே குழுவில் இருந்து போராடிய கிரண் பேடி மத்தியில் நிலையான ஆட்சி  அமைவதற்கு மோடிக்கே எனது  ஒட்டு என்று தனது ஆதரவை தெரிவித்திருப்பது தனிப்பட்ட விருப்பு , வெறுப்புகளை தாண்டி அவர் நாட்டின் மேல் கொண்டிருக்கும் அக்கறையை காட்டுகிறது . இதே போன்றதொரு முடிவை அன்னா எடுத்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை . இதையெல்லாம் மீறி அர்விந்த் தான் அடுத்த பிரதமர் என்கிற அளவிற்கு அளந்து விடும் அறிவுஜீவிகளுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ளலாம்  . பவர் ஸ்டார்  ஹிட் கொடுத்து விட்டார் என்பதற்காக சூப்பர் ஸ்டாராக ஆகி விட முடியாது ...


1 January 2014

தமிழ் சினிமா 2013 - TAMIL CINEMA 2013 ...


டந்த வருடம் ரிலீசான 150 க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் 80க்கும் மேற்பட்டவை புதுமுக இயக்குனர்கள் இயக்கத்தில் வந்திருப்பதும் , கமல் , அஜித் , சூர்யா என மெகா ஸ்டார்களின் படங்கள் ஹிட் ஆகியிருப்பதும் மொத்தத்தில் வெறும் பத்து சதவிகித படங்கள் கூட ஹிட் ஆகாததன் இழப்பை  கொஞ்சம் மறக்கடிக்கின்ற்ன . பாரதிராஜா , மணிரத்னம் போன்ற ஜாம்பவான்கள் சறுக்கினாலும் நலன் குமாரசாமி ,  பாலாஜி குமார் , விக்ரம் சுகுமாரன் போன்ற புதுமுகங்கள் நம்பிக்கை தருகிறார்கள் .  விஸ்வரூபம்  ரிலீசாகா விட்டால் நாட்டை விட்டே  சென்று விடுவேன் என்று கலங்கிய கமல் , தலைவா ரிலீஸ் பிரச்சனைக்காக கொடநாடு வரை சென்று விட்டு முதல்வரை பார்க்க முடியாமல் விரக்தியுடன்  திரும்பி வந்த விஜய் என்று சர்ச்சைகளுக்கு பெயர் போன ஆண்டாகவும் 2013 இருந்தது . வாலி ,டி.எம்.எஸ் , பி.பி.ஸ்ரீநிவாஸ் போன்ற ஜாம்பவான்களின் மறைவு ,  விஸ்வரூபம் .. பிரச்சனையை திறம்பட சமாளித்த உலகநாயகனின் துணிவு ,  இந்திய சினிமா 100 கொண்டாட்டங்களில் ஆட்சி பீடத்தில் இருப்பவர்களுக்கு வழக்கமாக சினிமா கலைஞர்கள் காட்டிய கனிவு போன்றவை 2013 ஆம் நாட்டின்  சிறப்பம்சங்கள் . முதல் ஆறு மாதங்களை பற்றி அறிய காண்க : அரையாண்டு சினிமா 2013 ... 

இனி எனது பார்வையில் தமிழ் சினிமா 2013

கவர்ந்த படங்கள் ( ரிலீசான மாதங்களின் அடிப்படையில்  )

 1. கண்ணா லட்டு தின்ன ஆசையா 
 2 .விஸ்வரூபம் 
 3. பரதேசி  
 4. சூது கவ்வும் 
 5. நேரம்  
 6. ஆதலால் காதல் செய்வீர்  
 7. ஓநாயும் ஆட்டுக்குட்டியும்
 8. பாண்டிய நாடு 
 9. விடியும் முன் 
10. மதயானைக் கூட்டம் 

டாப் டென் பாக்ஸ் ஆபீஸ்  ரிலீசான மாதங்களின் அடிப்படையில் )

1.  கண்ணா லட்டு தின்ன ஆசையா 
2.  விஸ்வரூபம்
3.  சூது கவ்வும்
4.  தீயா வேலைசெய்யணும் குமாரு
5.  சிங்கம் 2 
6  .ராஜா ராணி
7.  வருத்தப்படாத வாலிபர் சங்கம்
8. ஆரம்பம்
9 .பாண்டிய நாடு
10.பிரியாணி


ப்ளாக்பஸ்டர்  : விஸ்வரூபம்

டாப் டென் பாடல்கள்

1. கண்ணா லட்டு ( க.லதி.ஆ )
2. எவனென்று நினைத்தாய் ( விஸ்வரூபம் )
3. ஆஹா காதல் ( மூன்று பேர் மூன்று காதல் )  
4. மின்வெட்டு நாளில் ( எதிர்நீச்சல் )
5. காசு பணம் ( சூது கவ்வும் )
6. பிஸ்தா ( நேரம் )
7. கடல் ராசா ( மரியான் )
8. வாங்கன்னா ( தலைவா )
9. ஹே பேபி ( ராஜா ராணி )
10.பனங்கள்ளா ( இரண்டாம் உலகம் )

கவர்ந்தவர்கள் 

 கவர்ந்த படம் - பரதேசி
 கவர்ந்த நடிகர் - கமல்ஹாசன்   ( விஸ்வரூபம்   )
 கவர்ந்த நடிகை - பார்வதி   ( மரியான் )
 கவர்ந்த குணச்சித்திர நடிகர் - பாரதிராஜா  ( பாண்டியநாடு  )
 கவர்ந்த குணச்சித்திர நடிகை - துளசி ( ஆதலால் காதல் செய்வீர் )
 கவர்ந்த காமெடி நடிகர் -  பவர் ஸ்டார்  ( க.ல.தி.ஆ  )
 கவர்ந்த வில்லன் நடிகர் - ராகுல் போஸ் ( விஸ்வரூபம்  )
 கவர்ந்த இசையமைப்பாளர் - யுவன் ஷங்கர் ராஜா   ( மூ.பே.மூ.கா )
 கவர்ந்த பின்னணி இசை - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்  ( இளையராஜா   )
 கவர்ந்த ஆல்பம் - மூன்று பேர் மூன்று காதல் ( யுவன் ஷங்கர் ராஜா )
 கவர்ந்த பாடல் -  ஆனந்த யாழை ( தங்க மீன்கள்   )
 கவர்ந்த பாடகர் - கானா பாலா  ( ஹே பேபி )
 கவர்ந்த பாடலாசிரியர் - வைரமுத்து  ( எவனென்று  )
 கவர்ந்த வசனகர்த்தா - நவீன்  ( மூடர் கூடம் )
 கவர்ந்த திரைக்கதையாசிரியர் - நலன் குமாரசாமி ( சூது கவ்வும் )
 கவர்ந்த ஒளிப்பதிவாளர் - சானு வர்கீஸ்  ( விஸ்வரூபம் )
 கவர்ந்த இயக்குனர் - பாலா   ( பரதேசி   )
 கவர்ந்த புதுமுகம் - நஸ்ரியா  ( நேரம் )

வசூல் ராஜாக்கள் 

கமல்ஹாசன் ( விஸ்வரூபம் )
சூர்யா ( சிங்கம் 2 )
அஜித்குமார் ( ஆரம்பம் ) 

ஏமாற்றங்கள்

அலெக்ஸ் பாண்டியன் 
கடல் 
நய்யாண்டி
அன்னக்கொடி 
இரண்டாம் உலகம்

அனைவருக்கும் எனது இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...
  




















30 December 2013

மதயானைக் கூட்டம் - MADHAYANAIKOOTTAM - மிரள வைக்கும் ...


ருடக் கடைசியில் எதிர்பாராமல் வரும் சில படங்கள் நம்மை ஏகாதிபத்தியம் செய்து  விடுவதுண்டு . அந்த வரிசையில் புதுமுக இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வந்திருக்கும் மதயானைக்கூட்டத்தை சேர்க்கலாம் . அரிவாள் , கத்தியுடன் அவிங்க , இவிங்ய என்று அலையும் மதுரை மாந்தர்களை பற்றிய மற்றுமொரு படம் தான் என்றாலும் அதை மண்  மணம் மாறாமல் யதார்த்தமாக சொன்ன விதத்தில் ஸ்கோர் செய்கிறார் சுகுமாரன் ...

ரெண்டு பொண்டாட்டிக் காரரான  ஜெயக்கொடி தேவரின் ( முருகன் ஜி ) மறைவுக்கு பிறகு குடும்ப  பகை கொளுந்து விட்டு எரிகிறது .  மூத்த மனைவி செவனம்மா ( விஜி ) ,  அவள் மகன் , அவளுடைய சகோதரன் வீரத் தேவர்
( வேல ராமமூர்த்தி ) , இளைய மனைவியின் மகன் பார்த்திபன் ( கதிர் ) இப்படி காதாப்பாத்திரங்களின் உணர்ச்சித்  தீயில் நம்மை குளிர் காய வைக்கிறார் இயக்குனர் ...

முதல் படமே கதிருக்கு இப்படி அமைந்தது அதிர்ஷ்டம் . அதனை  இன்னும் நன்றாக பயன்படுத்திக் கொள்ளாமல் போனது துரதிருஷ்டம் . நிறைய இடங்களில் உணர்ச்சிகளை காட்டாமல் உம்மென்றே இருக்கிறார் . அடுத்தடுத்த படங்களில்  தேறி விடுவார் என்று நம்பலாம் . எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அதில் கல் தோன்றா காலத்து காதலியின் அத்தியாவசியத்துக்காக ஓவியா ...



விஜி க்கு இந்த படம் ஒரு மைல்கல் . படம் முழுவதும் ஒரு விதமான வெறித்த பார்வையால் நம்மை மிரள வைப்பவர் க்ளைமேக்ஸ் காட்சியில் கதறி அழுது நம்மை கலங்க வைக்கிறார் . இவருக்கும் இவர் சகோதரராக  நடித்திருக்கும் எழுத்தாளர் வேல ராமமூர்த்திக்கும் இடையேயான சீன்கள் குட்டி கிழக்கு சீமையிலே . படத்தில் வரும்  எல்லோரும் யதார்த்தமாக நடித்திருப்பது பெரிய பலம் . ரகுநந்தனின் பின்னணி இசை ரம்யம் ...

சாவில் தொடங்கி சாவில் முடியும் படம் வெறும் சம்பிரதாயமாக இல்லாமல் சின்ன சின்ன சடங்குகளுக்கும் காட்டப்படும் டீட்டைளிங்கில் நம்மை கட்டிப் போடுகிறது . தேவர் மகன் , விருமாண்டி போல தேவர் பின்னணி படம் தான் என்றாலும் அதிலிருந்த ஸ்டார்டம் இதில் இல்லாததால் படத்துடன் இயல்பாக ஒன்ற முடிகிறது . சாவு ஒப்பாரியிலேயே எல்லா கதாபாத்திரங்களையும் விளக்கிய விதம் , அவரவர் கோணத்திலிருந்து பார்க்கும் போது செய்வது சரி தான் என்பது போன்று அமைக்கப்பட்ட பாத்திரப் படைப்பு , யதார்த்தமாக இருந்தாலும் சின்ன சின்ன ட்விஸ்டுடன் நகரும் திரைக்கதை என எல்லாமே மனதில் பதிகின்றன ...

படத்தோடு ஒன்றாத காதல் , யதார்த்த சினிமாவில் திடீரென க்ளைமேக்ஸ் இல் புகுத்தப்படும் ஹீரோயிசம் , " புள்ளக் குட்டிங்கள படிக்க வைங்கடா " என்று கமல் சொல்லி 23 வருடங்களாகியும் இன்னும் பயபுள்ளைங்க திருந்தலையோ என்று லேசாக வரும் சலிப்பு இப்படி குறைகள் இருந்தாலும் படம் பார்த்து சில  நாட்கள் ஆகியும் தன் நினைவுகளால் இந்த மதயானைக் கூட்டம் நம்மை மிரள வைக்கும் ...

ஸ்கோர் கார்ட் : 45

28 December 2013

2014 - மோடி ஆர் நோபடி - MODI OR NOBODY ...


திர்பார்த்ததைப் போலவே 2014 தேர்தலில் அ.தி.மு.க தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்ததும்  , தி.மு.க காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகியிருப்பதும் நடந்திருக்கிறது . வாஜ்பாயை பாராட்டிய கையோடு  பி.ஜே.பி கூட்டணிக்கு தாவுவார்  என்று எதிர்பார்த்த நிலையில் அதனுடன் கூட்டு இல்லை என்று கலைஞர் அறிவித்திருப்பது ஆச்சர்யமே . ஆனால் இன்னும் தேர்தலுக்கு குறைந்தது நான்கு மாதங்கள்  உள்ள நிலையில் இது தான் அவருடைய உறுதியான முடிவா என்பதையும் சொல்வதற்கில்லை...

ஏனெனில் முன்பொரு முறை மத சார்புடைய  (!) பி.ஜே.பி யுடன் கூட்டு  இல்லை என்று சொன்ன  கலைஞர்  அதனோடு கூட்டணி வைத்துக் கொண்ட பின் " நான்  இருக்கும் இடத்தில் தான் மதசார்புக்கு இடமில்லையே " என்று மழுப்பியதை யாரும் மறந்திருக்க முடியாது . பெரிய கட்சியான தி.மு.க கூட்டணியில் சேர்ந்திருந்தால்  பி.ஜே.பி க்கு அது வலு சேர்க்கும்  என்றாலும் ஊழலுக்கு எதிரான அதன் பிரச்சாரத்திற்கு   பெரிய சறுக்கலை ஏற்படுத்தியிருக்கும்  ...

கடைசியில் ஒரு வழியாக இரண்டு பிரதான கழகங்களும் காங்கிரசை  கை கழுவியிருக்கும் இந்த வேளையில் ம.தி.மு.க ., பா.ம.க போன்ற இதர கட்சிககளை  தன்னுடன் இணைத்துக் கொண்டு பி.ஜே.பி தேர்தலை சந்திப்பது தன்னை மேலும் வலுப்படுத்திக்கொள்ள அதற்கு பெரிய வாய்ப்பாக அமையும் என்பதில் ஐயமில்லை . பி.ஜே.பி யை தீண்டத்தகாத கட்சி போல வர்ணித்து வந்த காங்கிரசிற்கு இன்று அதே நிலை ஏற்பட்டிருப்பதும்  எதிர்பார்த்ததே...

தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதை விட தேசிய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதே தே.மு.தி.க விற்கு வலிமை சேர்க்கும் . 2016 இல் நடக்கவிருக்கும் சட்டசமன்ற தேர்தலுக்கும் தன்  தலைமையில் கூட்டணியை தயார்படுத்திக் கொள்ள விஜயகாந்திக்கு இந்த கூட்டணி அருமையான சந்தர்ப்பம் . காங்கிரஸ் மேல் எதிர்ப்பு அலை வீசிக் கொண்டிருக்கும் இந்த நிலையில்  பி.ஜே.பி யுடன் சேர்வது அவரது சரிந்த செல்வாக்கை கொஞ்சமேனும் தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கலாம் ...

நடந்து முடிந்த ஐந்து சட்டமன்ற தேர்தல்களில் பி.ஜே.பி மூன்றில் ஜெயித்திருப்பதும் , பெரும்பான்மை கிடைக்காமல் போனாலும் 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக டில்லியில் உருவெடுத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது . மூன்று மாநிலங்களை கைப்பற்றியதை கணக்கில் கொள்ளாமல் டில்லியில் தோற்றதையே காரணமாக்கி மோடி அலையெல்லாம் ஒன்றுமில்லை என்பது போல சில மீடியாக்கள் விஷமமாக பிரச்சாரம் செய்து வருவது வேடிக்கையாக இருக்கிறது . டில்லியை பொறுத்த  வரை காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் பி.ஜே.பி க்கு மட்டும் விழாமல் ஆம் ஆத்மி க்கும் சென்றதே பி.ஜ.பி யின் சறுக்கலுக்கு காரணம் . ஆனால் தேசிய அளவில் காங்கிரஷிற்கு வலுவான மாற்றாக பி.ஜே.பி மட்டுமே உள்ளது ...

அதே நேரத்தில் திரிமூணல் , எஸ்.பி , அ.தி.மு.க உள்ளிட்ட வலுவான பிராந்திய கட்சிகள் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள்  பி.ஜே.பி க்கு மட்டும் போகாமல் பார்த்துக் கொள்ளும் . பிஹார் , ஓடிஸா இரண்டிலும் தனக்கிருந்த வலுவான கூட்டணியை பி.ஜே.பி  இழந்திருப்பதும் அதற்கு பெரிய சறுக்கல் . மோடி அலை இதையனைத்தும் சரிக்கட்டுவது கஷ்டமே . இருப்பினும் பி.ஜே.பி வலுவாக உள்ள  குஜராத் , மத்திய பிரதேஷம் , ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களையும் சேர்த்து 200 இடங்களுக்கு மேல் கிடைத்து விட்டால் அது ஆட்சியமைப்பது உறுதி . இதை மனதில் வைத்து அவர்கள் தேர்தல் வியூகம் அமைப்பார்கள் என்று நம்பலாம் ...

தங்களால் ஆட்சி அமைக்க முடியாதது கிட்டத்தட்ட உறுதியானதால் பி.ஜே.பி யை வர விடாமல் தடுப்பதே காங்கிரசின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் . பிராந்திய கட்சிகளின் களப்பில் அமையும் மூன்றாவது  அணிக்கு அது வெளியிலிருந்து ஆதரவு தரலாம் . இந்த கட்சிகளுக்குள் யாரை பிரதமராக தேர்ந்தெடுப்பது என்பது இமாலய சிக்கல் . அப்படியே ஒருவரை  ஒருமித்த ஆதரவுடன் தேர்ந்தெடுத்தாலும் அவர் எத்தனை நாட்கள் பிரதமாராக நீடிப்பார் என்பது கேள்விக்குறி . ஏற்கனவே இது போன்ற சிக்கலான சந்தர்ப்பங்களை இந்திய ஜனநாயகம் சந்தித்திருக்கிறது ...

பல விதமான பிரச்சனைகளையும் தாண்டி இன்று மக்கள் முன் நிற்கும் மிகப்பெரிய பிரச்னை விலைவாசி உயர்வு . அடுத்து பி.ஜே.பி ஆட்சியமைத்தாலே இதனை உடனடியாக சரிக்கட்ட முடியாது , அப்படியிருக்க யார் வழி நடத்தப் போகிற தலைவர் என்பது தெரியாமலேயே பல கட்சிகள் அணி சேர்ந்து ஆட்சியமைத்தால் ஏற்கனவே படு குழியில் இருக்கும் நமது பெருளாதாரம் அதள பாதாளத்திற்குள்  போவது உறுதி ...

இப்பொழுதிருக்கும் சூழ்நிலையில் குழப்பமில்லாத நிலையான ஆட்சியை மத்தியில் அமர்த்துவதே ஒவ்வொரு குடிமகனின் தலையாய ஜனநாயக கடமை . அதற்கு பி.ஜே.பி , காங்கிரஸ் , அ.தி.மு.க , தி.மு.க என்று கட்சிகளின் தனிப்பட்ட நிறை குறைகளையும் தாண்டி நாட்டை வழிநடத்துவதற்கு ஒரு  நல்ல தலைவன் தேவை . இன்று நம் கண் முன் தெரியும் ஒரே  தலைவன் மோடி . அவர் வந்து மட்டும் பெரிதாக என்ன செய்து விடப்போகிறார் என்று எதிர்மறையாக கேட்காமல் , ஒரு சாதாரண டீ வியாபாரியாக இருந்து இன்று ஒரு மாநிலத்திற்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலைமைச்சராகி அதை வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று கொண்டிருக்கும் ஒருவர் ஏன் இந்திய நாட்டிற்க்கு பிரதமாராக வரக் கூடாது என்று ஒவ்வொருவரும் யோசிக்க ஆரம்பித்தால் ஒரு விடிவு பிறக்கும் ...

எது நடந்தாலும் காங்கிரஷிற்கு தான் ஓட்டுப் போடுவேன்  என்பவர்கள் போட்டு விட்டுப் போகட்டும் . ஆனால் காங்கிரஸ் ஆட்சியின் மேல் வெறுப்பிலிருப்பவர்கள் தங்கள் ஓட்டுக்களை பி.ஜே.பி க்கு போடுவது மட்டுமே சரியான தீர்வு .  ஏனெனில் டில்லி யில் மக்கள் எடுத்த குழப்பமான முடிவால் அவர்கள் எந்த கட்சியை தூக்கியெறிய நினைத்தார்களோ அதே கட்சியின் ஆதரவுடன் தான் இன்று ஆம் ஆத்மி யே அரசமைக்க முடிகிறது . அதே போல 2014 பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஷிற்கு எதிரான ஓட்டுக்கள் அனைத்தும் பி.ஜே.பி க்கு சென்றடையாத நிலையில் காங்கிரசின் ஆதரவுடன் மீண்டும் பல கட்சிகளின் கூட்டணியாட்சி அமையக் கூடிய பரிதாபமான நிலைக்கு நாளை மீண்டும் நாம் தள்ளப்படலாம் . அப்படி ஒரு நிலைமை வராமல் இருப்பதற்கு ஒரே தீர்வு மோடி ஆர் நோபடி ...


22 December 2013

பிரியாணி - BIRIYAANI - சுவைக்கலாம் ...


ல் இன்ஆல் அழகுராஜா விற்காக ஒன்றரை மாதம் தள்ளி இப்பொழுது ரிலீஸ் ஆகியிருக்கும் வெங்கட் பிரபு வின் பிரியாணி ரசிகர்களுக்கு முழுமையான விருந்தாக அமையாமல் போனாலும் தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றிக்காக காத்திருக்கும் கார்த்தி யின் பசியை  தீர்க்கும் என்று நம்பலாம் ...

சுகன் ( கார்த்தி ) , பரசு ( ப்ரேம்ஜி  ) இருவரும் இணைபிரியா நண்பர்கள் . ஜொல்சுடன் லெக் பீசுக்கு ( மாண்டி தாக்கர் ) ஆசைப்பட்டு இருவரும்  இடியாப்ப சிக்கலில் மாட்டிக்கொள்கிறார்கள் .  பின் அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே கதை ( ! ) ... 


கார்த்தி க்கு பிரேம்ஜி பார்க்கும்  பெண்களையும் சேர்த்து உஷார் செய்யும் ப்ளேபாய் கேரக்டர் . ரசித்து நடித்திருக்கிறார் . பழக்க தோஷத்திற்காக இரண்டு சண்டைகள் போட்டாலும் அளவாக நடித்து அப்ளாஸ் வாங்குகிறார் . படத்திற்கு  பெரிய ப்ளஸ் ப்ரேம்ஜி . ஒவ்வொரு பெண்ணாக தேடிப்பிடித்து கடைசியில் கார்த்திக்கு தாரை வார்க்கும் போது ரசிக்க வைக்கிறார் ...


ஹன்சிகா படத்தில் இருக்கிறார் . நாசர் , ராம்கி , சம்பத் என எல்லோருமே பொருத்தமாக நடித்திருக்கிறார்கள் . முக்கியமான கதாபாத்திரத்திற்கு மாண்டி நல்ல தேர்வு . பொதுவாக வெங்கட் பிரபு வின் படங்களுக்கு நன்றாக இசையமைக்கும் யுவனுக்கு இது 100 வது படம் என்பது கூடுதல் சிறப்பு . " நா நனனா " , " மிஷிஷிப்பி " பாடல்கள் முணுமுணுக்க  வைக்கின்றன ...


வழக்கம் போல கதைக்கு மெனெக்கெடாமல் விறுவிறுப்பான திரைக்கதையை கையிலெடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு . நீளமாக தெரிந்தாலும் சுவாரசியமாக போகும் முதல் பாதி , அடுத்து என்ன நடக்கும் என்று யோசிக்க வைக்கும் திரைக்கதை , பாடல்களை படமாக்கிய விதம் எல்லாமே பிரியாணியை மணக்க வைக்கின்றன ...

சரக்கடிப்பது தவிர வாழ்க்கையில் ஒன்றுமே இல்லையென்பது போல ஹேங்ஓவர் கொடுக்கும் ஓவர் டோஸ் சீன்கள் , பெண்களை மட்டப்படுத்தும் வசனங்கள் , நாசர் வேஷத்தில் பிரேம்ஜி போகும் ஜெய்சங்கர் காலத்து பார்முலா , ட்விஸ்ட் இருந்தாலும் நிறைவை தராத க்ளைமேக்ஸ் போன்றவை பிரியாணியின் காரத்தை குறைத்தாலும் பொழுதுபோக்கிற்காக ஒரு முறை சுவைக்கலாம் ...

ஸ்கோர் கார்ட் : 41


4 December 2013

விடியும் முன் - VIDIYUM MUN - வெளிச்சம் ...




புற்றீசல் போல வரும் லோ பட்ஜெட் படங்களுள் அத்திப் பூத்தாற்ப் போல ஒன்றிரண்டு மட்டும் கூர்ந்து கவனிக்க வைக்கும் . அப்படி கவனிக்க வைத்த படங்களுள் ஒன்று விடியும் முன் . இப்படியுமா ஒருவன் வக்கிரமாக சிந்திப்பான் என்றும் , இப்படிப்பட்ட இருட்டு சம்பவங்களை வைத்து  படமெடுக்கும் தையிரியம் ஒருவனுக்கு இருக்கிறதே என்றும் இரு வேறு வகையான எண்ண ஓட்டங்களை மனதிற்குள் விதைக்கிறார்  இயக்குனர் பாலாஜி குமார் ...

விலை மாது ரேகா ( பூஜா ) ஒரு 12 வயது சிறுமியுடன்  ( மாளவிகா ) மழை இரவில் தப்பியோடுகிறாள் . பணக்காரன் சின்னையா ( வினோத் ) , ரவுடி துரைசிங்கம் , பிம்ப் சிங்காரம் ( அமரேந்திரன் ) , அவன் நண்பன் லங்கேஷ் ( ஜான் விஜய் ) என நால்வரும் அந்த இருவரையும் துரத்துகிறார்கள் . அது  ஏன் ? எதற்கு ? எப்படி என்பதை விறு விறு திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார்கள் ...

அசிங்கமான பிச்சைக்காரியாக நடித்ததாலோ என்னவோ நான் கடவுளுக்கு பிறகு வாய்ப்பில்லாமல் இருந்த பூஜா விற்கு இந்த படத்தில் பெயர் சொல்லும் வேடம் . குற்ற உணர்ச்சி , விரக்தி இரண்டையும் அவர் கண்கள் இயல்பாகவே வெளிப்படுத்துகின்றன . சின்ன பெண் மாளவிகா கொஞ்சம் கொஞ்சமாய்  மனதை ஆக்ரமிக்கிறாள் . அவளுக்கு ஏதாவது நேர்ந்து விடுமோ என்கிற பதைபதைப்பை ஏற்படுத்துவதே திரைக்கதையின் தனிச்சிறப்பு . அவளுக்கும் பூஜாவுக்கும் இடையேயான சீன்கள் குட்டி ஹைக்கூ ...


அமரேந்திரன் , ஜான் விஜய் இருவரும் சில இடங்களில் படத்தின் மேல் நமக்கு ஏற்படும் அயர்ச்சியை  போக்க உதவியிருக்கிறார்கள் . வசனங்கள் அதிகம் இல்லாமல் கண்களால் மட்டும் பேசும் வினோத் நல்ல தேர்வு . சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவு , கிரீஸ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை இரண்டுமே படத்திற்கு பலம் ...

அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத அல்லது பிடிக்காத கதை , விறுவிறுப்பு இருந்தாலும் ஆங்காங்கே தொய்வுடன் செல்லும் மிஸ்கின் பாணி திரைக்கதை , சலிப்பை தரும் க்ளைமாக்ஸ் , உடல் ரீதியான ஆபாசங்கள் இல்லாவிட்டாலும் அதைவிட அதிகமாக மன ரீதியான கிளர்ச்சியை அல்லது வக்கிரத்தை தூண்டி விடக்கூடிய அபாயமுள்ள சீன்கள் இப்படி விடியும் முன் நிறைய  இருட்டுப் பக்கங்களை கொண்டிருக்கிறது ...

தர்க்க ரீதியான விவாதங்களை தவிர்த்து விட்டுப் பார்த்தால் ஒரு சினிமாவாக கிட்டத்தட்ட இரண்டரை  மணி நேரம் திரைக்கதைக்குள் நம்மை ஒன்ற வைத்த தந்திரம் , கதாபாத்திரங்களின் இயல்பான நடிப்பு , படம் முடிந்த பிறகும் அது நமக்குள் ஏற்படுத்தும் பாதிப்பு போன்றவை இருட்டையும் தாண்டி படத்திற்கு வெளிச்சத்தை கொடுக்கின்றன ...

ஸ்கோர் கார்ட் : 45

23 November 2013

இரண்டாம் உலகம் - IRANDAM ULAGAM - இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செல்வராகவா ?...

 

7G யில் பிரமிக்க வைத்து புதுப்பேட்டை க்கு பின் மனதில் குடியேறியவர் செல்வராகவன் . கிடைத்த  அருமையான வாய்ப்பை ஆயிரத்தில் ஒருவன் போலவே இழுவையான இரண்டாம் பாதியால் இரண்டாம் உலகத்திலும்
நழுவ விட்டிருக்கிறார் ...

நார்மலான நம் உலகம் , ஃபேண்டஸி யான இரண்டாம் உலகம் . இரண்டிலும் ஆர்யா , அனுஷ்கா இருக்கிறார்கள் . இந்த உலகத்தில் காதலியை இழக்கும் ஆர்யா காதலே இல்லாத இரண்டாம் உலகத்திற்கு சென்று அங்கிருக்கும் ஆர்யா - அனுஷ்கா இடையே காதல் பூவை மலர வைக்கிறார்  . காதல் , ஃபேண்டஸி இரண்டையும் குழப்பி கதையை சொல்லியிருக்கிறார் இயக்குனர் ...


சரியான  உடற்கட்டுடன் ஆர்யா கதைக்கு நல்ல தேர்வு . ஆதி வாசி தோற்றத்தில் ஆஞ்சநேயர் போல இருந்தாலும் சிங்கத்துடனும் , அனுஷ்கா வுடனும் சண்டை போடும் இடங்களில் ரசிக்க வைக்கிறார் . அனுஷ்கா கேரியரில் இந்த படம் ஒரு மைல்கல் . மென்மையான டாக்டர் , வீரமான காட்டுவாசி இரண்டிலும் வித்தியாசம் காட்டி வியாபிக்கிறார் . மற்ற பெண்களுடன் ஆர்யா  பழகுவதை பார்த்து பொறுமுவது , காதல் வந்தவுடன் வெட்கப்படுவது என நிறைய இடங்கள் ஆஸம் . ஆர்யாவின் நண்பராக வருபவர் தமிழ் காமெடிக்கு நல்ல வரவு ...

ராம்ஜி செல்வராகவனின் முதுகெலும்பு என்பதை ஒளிப்பதிவில் மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறார் . வைரமுத்து - ஹாரிஸ் கூட்டணியில் எல்லா பாடல்களும் ஹம்மிங் செய்ய வைக்கின்றன . அனிருத் தின் பின்னணி இசை படத்திற்கு பலம் . ஸ்பெஷல் எஃபெக்டஸ்  , லொக்கேசன் எல்லாமே எல்லாமே படத்திற்கு தேவையான பிரம்மாண்டத்தை தக்க வைக்கின்றன ...


கதையின் தொடக்கத்திலேயே அனுஷ்கா தன் காதலை சொல்வது , ஆர்யா காதலை ஏற்க மறுப்பது , பின் ஆர்யா தொடர அனுஷ்கா மறுப்பது , காதலை ஏற்றுக்கொண்ட பின் வரும் காதல் காட்சிகள் என எல்லாவற்றிலுமே செல்வராகவனின் அக்மார்க் காதலிஸம் கண்களுக்கு விருந்து .  அதே போல படம் நெடுக வரும் ஷார்ட் அண்ட் க்யுட் வசனங்கள் , படத்தின் முதல்பாதி இரண்டுமே இரண்டாம் உலகத்தில் முதல் தரம் ...

இது போன்ற சில சிறப்பம்சங்கள் , கதை தேர்வு போன்றவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால்  இரண்டாம் பாதி , குழப்பமான திரைக்கதை , ஆர்யா - அனுஷ்கா தவிர மனதில் பதியாத இரண்டாம் உலக கதாபாத்திரங்கள் இவையெல்லாம் இரண்டாம் உலகத்தை பாதாள உலகத்திற்கு அனுப்புகின்றன . தனக்கு தெரிந்த காதல் களத்தில் கவர்ந்தாலும் மகதீரா , அவதார் போன்ற படங்களின் பாதிப்பில் " அவலை நினைத்து உரலை இடித்தது " போல இந்த படத்தை எடுத்து விட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது . வழக்கமான மசாலா இல்லாமல் தமிழில் ஃபேண்டஸி வகையறா படம் எடுத்த முயற்சியை பாராட்டலாம் . ஆனால் அதை சரி வர கொடுக்க முடியாமல் போனதால் இதற்குத்தானா ஆசைப்பட்டாய் செல்வராகவா ? என்று ஏக்கத்தோடு சொல்ல வைக்கிறார் இயக்குனர் ...

ஸ்கோர் கார்ட் : 40


16 November 2013

சச்சின் - SACHIN ...


மூன்றே நாட்களில் இந்தியா டெஸ்ட் மேட்சை ஜெயித்ததற்காக முதல் முறையாக ரசிகர்கள் வருத்தப்படுகிறார்கள் . உலகக்கோப்பை இறுதிப்போட்டி போல மைதானமே நிரம்பி வழிகிறது . 18 ஆட்டங்களிலேயே 100 விக்கெட்டுகளை வீழ்த்தியவனையும்  , அறிமுகமான முதல் இரண்டு ஆட்டங்களிலும்  செஞ்சுரி அடித்தவனையும் அனைவரும் மறந்தே போகிறார்கள் . அம்பயர் உட்பட எதிரணியினர் அனைவரும் ஒரு  விளையாட்டு வீரனை வரிசையில்  நின்று வரவேற்கிறார்கள் .  இந்திய அரசாங்கம் பாரத ரத்னா விருதை ஒருவனுக்கு 40 வயதிலேயே வழங்கி கவுரவிக்கிறது . இவையனைத்தும் நடந்தது 24 வருடங்களுக்கு முன்னால்  நவம்பரில் அறிமுகமாகி இன்று நவம்பர் 16 இல் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து வெளியேறும் சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் என்னும் மகத்தான மனிதனுக்காக ...

கால் நூற்றாண்டு காலமாக கிரிக்கெட்டையே மூச்சுக்காற்றாக சுவாசித்து வருபவர் , உலகிலேயே  அதிக அளவு டெஸ்ட் மற்றும் ஒன் டே ஆட்டங்களை  ஆடியவர் மற்றும் ரன்களை குவித்தவர் , சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்தவர் , ஒரு நாள் கிரிக்கெட்  மேட்சில்  முதன் முறையாக 200 ரன்களை அடித்தவர் , அதிக அளவு மேன் ஆப் தி மேட்ச் அவார்ட்களை வாங்கிக் குவித்தவர்  இப்படி எவ்வளவோ சாதனைகளையும் , புள்ளி விவரங்களையும் தாண்டி  " கிரிக்கெட் எங்கள் மதம் சச்சின் அதன் கடவுள் " என்று நாத்திகர்களை கூட சொல்ல வைத்தவர் சச்சின் ...

எளிமை ,  ஒழுக்கம் , கட்டுப்பாடு , அர்ப்பணிப்பு , உதவும் மனப்பான்மை போன்ற நற்பண்புகளால் சிறந்த வீரர் என்பதையும் தாண்டி சிறந்த மனிதராக ரசிர்களால் மட்டுமல்லாமல் முன்னாள் , இந்நாள் விளையாட்டு வீரர்களாலும் கொண்டாடப்படுபவர் சச்சின் . இவரது ஒரு நாள் போட்டி சாதனைகள் ஒரு வேளை நாளை கோலிக்களாலோ  , டெஸ்ட் மேட்ச் சாதனைகள் புஜாராக்களாலோ முறியடிக்கப்படலாம் . ஆனால் அப்பொழுதும் கிரிக்கெட் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருபவராக சச்சின் மட்டுமே இருப்பார் ..


15 November 2013

பீட்சா II வில்லா - WOULD HAVE BEEN BETTER ...




பொதுவாக பெரிய வெற்றியடையும் படங்களின் இரண்டாம் பாகங்கள் எதிர்பார்ப்பை அவ்வளவாக  பூர்த்தி செய்வதில்லை . தமிழில்  பில்லா விற்கு பிறகு அதற்கு சமீபத்திய உதாரணம் வில்லா . ஆனாலும்  பெயரை தவிர முதல் பாகத்தோடு வேறு எந்தவித தொடர்புமில்லாமல் கத்தியின்றி ரத்தமின்றி ஒரு திகில் படத்தை கொடுக்க முற்பட்டமைக்காக இயக்குனர் தீபனை பாராட்டலாம் ...

பிசினசில்  எல்லா சொத்துக்களையும் இழந்தாலும் பெரிய எழுத்தாளனாக வேண்டுமென்கிற கனவில் இருக்கும் ஜெபினுக்கு ( அசோக் செல்வன் ) இறந்து போன அப்பாவின் ( நாசர் ) சொத்தான வில்லா கைக்கு வருகிறது . அங்கு காதலி ஆர்த்தி ( சஞ்சிதா ) யுடன் தங்கும் ஜெபினுக்கு என்ன நேர்கிறது என்பதை ஸ்லோவான முதல் பாதி , புத்திசாலித்தனமான க்ளைமேக்ஸ் இரண்டையும் கலந்து சொல்லியிருக்கிறார்கள்  ...

அசோக் செல்வனுக்கு எழுத்தாளனுக்கு ஏற்ற கேரக்டர் . தாடி , ஜிப்பா , ரிம்லெஸ்  கண்ணாடி என பொருத்தமாகவே இருக்கிறார் . முகம் மட்டும் எப்பொழுதும் இறுக்கமாகவே இருக்கிறது . ஹீரோவுக்கு சமமான அல்லது ஒரு படி மேலான பாத்திரத்தில் சஞ்சிதா . நல்ல வாய்ப்பிருந்தும் ஏனோ பெரிதாக கவரவில்லை . நாசர் வீணடிக்கப்பட்டிருக்கிறார் ...


முதல் பாகத்துடன் ஒப்பிடும்  பொழுது ஒரு மாற்று குறைவாக  இருந்தாலும் தீபக்  கின் ஒளிப்பதிவும் , சந்தோஷ் நாராயணின் இசையும் படத்திற்கு பலங்கள் . வழக்கமான திகில்  படம் போல இருந்துவிடக் கூடாது என்கிற இயக்குனரின் எண்ணத்திற்கேற்ப இருவரும் அடக்கி வாசித்திருப்பது போல தெரிகிறது ...

பேய் , திகில் படம் என்றவுடன் லிப்ஸ்டிக் , மைதா மாவை அப்பிக்கொண்டு ஓடி வரும் பெண்கள் , அதிர வைக்கும் இசை , அப்நார்மல் கேரக்டர்ஸ் போன்றவற்றை தவிர்த்ததில் இயக்குனர் வித்தியாசம் காட்டுகிறார் . ஸ்லோவாக இருந்தாலும் டீட்டைலிங்கான பின்னணியுடன் கதையை நகர்த்திய விதம் , யோசிக்க வைக்கும் க்ளைமேக்ஸ் போன்றவை வில்லா வில் நல்லாவே இருக்கின்றன ...

வழக்கமான விஷயங்களை தவிர்த்திருந்தாலும் திகில் படங்களுக்கே உரிய அடுத்து என்ன நடக்கும் என்கிற பரபரப்பை கொடுக்க தவறியிருக்கிறார்கள் . அதிலும் படம் படு ஸ்லோவாக நகர்வதால் ஒன்னேமுக்கால்  மணி நேரம் என்பதே மூன்று மணிநேரம் போல ஒரு அயர்ச்சியை கொடுக்கிறது . அருமையான க்ளைமேக்ஸ் தான் . ஆனால் அதுவும் சட்டென்று அனைவராலும் புரிந்து கொள்ள  முடியாத விதத்தில் இருப்பது வணிக ரீதியாக
படத்திற்கு சறுக்கல் . சென்டரை மட்டும் கருத்தில் வைக்காமல் கதையோடு சேர்த்து  ரசிக்கும் படி விறுவிறுப்பான திரைக்கதையையும் அமைத்திருந்தால் அனைவரும் வில்லா வில் வசித்திருக்கலாம் . பீட்சா II வில்லா - வுட் ஹேவ் பீன் பெட்டெர் ...

ஸ்கோர் கார்ட் : 41







Related Posts Plugin for WordPress, Blogger...