21 October 2011

வேர்கள் – சிறுகதை...

     
    மாலை சூரியன் மறைந்து , இரவின்  முழு நிலவு வர தாமதப்பட அதைக் கண்டிப்பது போல் கண் சிமிட்டி , சிமிட்டி எரிந்து கொண்டிருந்தது அந்த நடைபாதை மின்விளக்கு....நீளமான பெஞ்சின் ஓரத்தை காக்கா எச்சம் குத்தகைக்கு  எடுத்திருக்க ,பெஞ்ச் நடுவில் தூக்கமா , சிந்தனையா என 
பார்ப்பவர்கள் குழம்பும் படி கைகள் கட்டி அமர்ந்திருந்தார் சிவசங்கரன்....

   " என்ன ஓய் நல்ல தூக்கமா..? கேட்டவருக்கு சிவசங்கரனைப் போல அறுபத்தைந்து வயது இருக்கும், அவர் தினமும் வாக்கிங் போவார் என்பதை தொப்பையில்லாத உடல்வாகும் , முகத்தில் வழியும் வியர்வையும்  சொல்லாமல் சொல்லின....

   " அதெல்லாம் ஒன்னும் இல்ல நடராஜன் , இன்னிக்கு என்னமோ ரொம்ப நடக்க முடியல அதான் அப்படியே சித்த  நேரம் உட்கார்ந்தேன் "

   " அப்புறம் வேற என்ன சேதி "

   அவர்கள் பேச்சு சிறிது நேரம் கிரிக்கெட் , உள்ளாட்சி தேர்தல் ,  அன்னா ஹசாரே என்று நீண்டது ...

  " மத்தபடி வீட்டு சமாச்சாரம்லாம்  எப்படி ?..என்று ஆரம்பித்தார் நடராஜன்...

   " பெருசா ஒன்னும் இல்ல ,  மூத்த பையனுக்கு பிரமோசன் வந்து சம்பளம் ஒரு லட்சத்தை தாண்டியாச்சு...ரெண்டாவது பையனும் , மருமகளும் வேலைக்கு போறதுனால அங்கயும் ஒரு குறையும் இல்ல..என் பேரன் கிளாஸ் பஸ்ட் வந்திருக்கான் " சொல்லும் போதே அவர் முகத்தில் பெருமிதம் பொங்கியது ...

  " ரொம்ப சந்தோசம்..என் பையனும் ஸ்ரீபெரும்புதூர்ல மூணாவது வீடு வாங்கிட்டான்..நல்ல இன்வெஸ்ட்மென்ட் , ரெண்டு வருசத்துலேயே டபுள் ஆயிடும்னு சொல்றாங்களாம்"

  " ஆமாமா , அந்தக் காலம் மாதிரி இல்ல..இந்தக் காலத்து பசங்க சம்பாதிக்கறதுலையும் , சேக்கருதலையும்   ரொம்ப தெளிவா இருக்காங்க , அதிலயும் அவன் காலேஜ் படிக்கும் போது ஒரு தடவ ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரில கெடந்தப்போ ,  மூஞ்சியெல்லாம் ரத்தத்தோட ஒரு நிமிஷம் கூட பாக்க முடியல , எவ்வளவோ கஷ்டப்பட்டு காப்பாத்துனோம் . இப்போ அவன் இருக்கற நிலமைய பாக்கறப்ப ரொம்ப பெருமையா இருக்கு "

   " நாம  தான் எவ்வளவோ கஷ்டப்பட்டாச்சு , பசங்க நல்லா இருக்கணும், என் செட்டில்மென்ட்  பணம் முழுசையும் பையன் மேற்படிப்புக்கு செலவு செஞ்சப்போ சொந்தக்காரங்க எல்லாம் " பொழைக்க தெரியாதவன் "னு என் காது படவே பேசினாங்க, இப்ப என்ன ஆச்சு பாத்தீங்களா , இவன் சம்பாதிக்கறத பாத்து எல்லாம் மூக்கு மேல விரல வைக்குறாங்க "

   " அது சரி தான்,  நல்லது , கெட்டது எது நடந்தாலும் சொந்தக்காரன் " நான் தான் அப்பவே சொன்னேன்லம்பான் " , என்று சிவசங்கரன் நாட்டு நடப்பை சொல்லி சிரித்தார்...

    தொடர்ந்து " நானும் என்ன பிரச்சனை வந்தாலும் பசங்களுக்கு ஒரு குறை வைக்கல , என் பொண்டாட்டி சொல்லியே கேட்கலையே, அவ நகையை வச்சு தான் பசங்க படிப்ப சமாளிச்சேன் , இதெல்லாம் பாக்க அவளுக்கு தான் குடுத்து வைக்கல , மகராசியா போய் சேந்துட்டா "... ,கொஞ்சம் கண்  கலங்கியபடியே வானத்தை நோக்கி பார்த்த சிவசங்கரனை ஆசுவாசப்படுத்துவது போல் தோள்களில் கை போட்டார் நடராஜன்....

   " விடுங்க , சிவசங்கரன் . சின்ன குழந்தை மாதிரி , பசங்க நல்லா இருக்கறத பாத்து அவங்க ஆன்மா நிச்சயம் சந்தோசப்படும் "...

   வாய் சமாதானம் சொன்னாலும் , மனைவியை இழந்த சோகத்தை அவர் கண்கள் காட்டிக்கொடுத்தன...சிறிது நேர வெற்றிடத்தை மிதமாக வீசிய காற்றும் , மர அசைவுகளும் நிவர்த்தி செய்தன..

   " டைம் எட்டு இருக்காது சிவசங்கரன் "

   " ம்..ம்..இருக்கும் , சாப்பிட போகணும், எல்லாரும் காத்திருப்பாங்க "...

   " சரி வாங்க போகலாம் "

    இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற  முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி நடந்தார்கள்....

18 comments:

குடந்தை அன்புமணி said...

பெற்றவர்கள் எப்போதும் பிள்ளைகளின் நல்லவற்றிற்காகவே செய்கிறார்கள். ஆனால் பிள்ளைகள்தான்... நாம் பெற்ற பிள்ளைகள் நமக்கு திருப்பி செய்வார்கள் என்று இப்போதெல்லாம் எதிர்பார்க்ககூடாது. அந்தவகையில் நாமும் நமக்கென்று கொஞ்சம் சேமிக்கவும் வேண்டும். இதுதான் இன்றைய பாடம். நாளை எப்படியோ...

Anonymous said...

வேர்கள் – சிறுகதை...

பாடம்.

ananthu said...

குடந்தை அன்புமணி said...
பெற்றவர்கள் எப்போதும் பிள்ளைகளின் நல்லவற்றிற்காகவே செய்கிறார்கள். ஆனால் பிள்ளைகள்தான்... நாம் பெற்ற பிள்ளைகள் நமக்கு திருப்பி செய்வார்கள் என்று இப்போதெல்லாம் எதிர்பார்க்ககூடாது. அந்தவகையில் நாமும் நமக்கென்று கொஞ்சம் சேமிக்கவும் வேண்டும். இதுதான் இன்றைய பாடம். நாளை எப்படியோ...

எதிர்பார்ப்பில்லாமல் செய்வதே பெற்றோர்களின் சிறப்பு ... வருகைக்கு நன்றி ...

ananthu said...

ரெவெரி said...
வேர்கள் – சிறுகதை...
பாடம்.

பாடம் மட்டுமல்ல நிதர்சனமும் கூட ... நன்றி ...

ப.கந்தசாமி said...

முதியோர் இல்ல வாழ்வு என்பது மோசமானதா? அதை வானப்பிரஸ்தம் என்று ஏன் கருதக் கூடாது?

ananthu said...

DrPKandaswamyPhD said...
முதியோர் இல்ல வாழ்வு என்பது மோசமானதா? அதை வானப்பிரஸ்தம் என்று ஏன் கருதக் கூடாது?

மோசம் என்று நான் சொல்லவில்லை ... பிள்ளைகள் நிராகரித்தாலும் பெற்றோர்கள் அவர்கள் மீது அக்கறையோடு இருக்கிறார்கள் என்பதே கரு ...

அனுஷ்யா said...

narrating style is good..with a commendable storybase...

சிவகுமாரன் said...

எதிர்பார்த்த ட்விஷ்ட்டுடன் கூடிய முடிவு.
அருமை.

ananthu said...

மயிலன் said...
narrating style is good..with a commendable storybase...

Thanks மயிலன்...

ananthu said...

சிவகுமாரன் said...
எதிர்பார்த்த ட்விஷ்ட்டுடன் கூடிய முடிவு.
அருமை.

நன்றி சிவகுமாரன் ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

// இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி நடந்தார்கள்....//

கண்கள் கலங்கியது, இந்தக் கடைசி வரிகளைப் படித்ததும்.

// " நானும் என்ன பிரச்சனை வந்தாலும் பசங்களுக்கு ஒரு குறை வைக்கல , என் பொண்டாட்டி சொல்லியே கேட்கலையே, அவ நகையை வச்சு தான் பசங்க படிப்ப சமாளிச்சேன் , இதெல்லாம் பாக்க அவளுக்கு தான் குடுத்து வைக்கல , மகராசியா போய் சேந்துட்டா "..//

மிகவும் வருத்தப்பட வைத்த வரிகள்.

பெற்றமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பது உண்மை. அதை அழகாக கதையாக்கியுள்ள உங்களுக்கு என் பாராட்டுக்கள். அன்புடன் vgk

nilaamaghal said...

நல்லது , கெட்டது எது நடந்தாலும் சொந்தக்காரன் " நான் தான் அப்பவே சொன்னேன்லம்பான் " //

:-))

//இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி //

:-((

ஹேமா said...

இன்றைய காலகட்டத்தின் யதார்த்த உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள் ஆனந்த் !

ananthu said...

வை.கோபாலகிருஷ்ணன் said...
// இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி நடந்தார்கள்....//

கண்கள் கலங்கியது, இந்தக் கடைசி வரிகளைப் படித்ததும்.

// " நானும் என்ன பிரச்சனை வந்தாலும் பசங்களுக்கு ஒரு குறை வைக்கல , என் பொண்டாட்டி சொல்லியே கேட்கலையே, அவ நகையை வச்சு தான் பசங்க படிப்ப சமாளிச்சேன் , இதெல்லாம் பாக்க அவளுக்கு தான் குடுத்து வைக்கல , மகராசியா போய் சேந்துட்டா "..//

மிகவும் வருத்தப்பட வைத்த வரிகள்.

பெற்றமனம் பித்து, பிள்ளை மனம் கல்லு என்பது உண்மை. அதை அழகாக கதையாக்கியுள்ள உங்களுக்கு என் பாராட்டுக்கள். அன்புடன் vgk


என் சிறுகதைக்கான உங்கள் பின்னூட்டமே ஒரு குட்டி கதை போல அழகாக உள்ளது ... நன்றி ...

ananthu said...

nilaamaghal said...
நல்லது , கெட்டது எது நடந்தாலும் சொந்தக்காரன் " நான் தான் அப்பவே சொன்னேன்லம்பான் " //
:-))

//இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி //
:-((

nilaamaghal said...
நல்லது , கெட்டது எது நடந்தாலும் சொந்தக்காரன் " நான் தான் அப்பவே சொன்னேன்லம்பான் " //

:-))

//இருவரும் மெதுவாக " சரணாலயம் " என்ற முதியோர்கள் மறு வாழ்வு மையத்தை நோக்கி //

நன்றி ...

ananthu said...

ஹேமா said...
இன்றைய காலகட்டத்தின் யதார்த்த உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள் ஆனந்த் !

நன்றி ஹேமா ...

இராஜராஜேஸ்வரி said...

நிதர்சன கதைக்குப் பாராட்டுக்கள்..

ananthu said...

நன்றி ... தீபாவளி நல வாழ்த்துக்கள் ...

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...